எங்களுக்குப் 10 வேண்டும் .. தேசிய லீக்
திருச்சி:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தலைவரிடம் 10 தொகுதிகள் கேட்போம் என தமிழகதேசிய லீக்கின் தலைவர் எம்.ஏ.லத்தீப் கூறியுள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நாங்கள் 10 தொகுதிகள் கேட்போம். ஆனால் கூட்டணியில் மேலும்பல புதிய கட்சிகள் இணைந்தால் அதற்கேற்றாற் போல் குறைவான தொகுதிகள் கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.
1989-ம் ஆண்டு எங்களுக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.இப்போது வரவிருக்கும் தேர்தலில் எங்களுக்கு அதிகமான தொகுதிகள் தரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இந்திய தேசிய லீக் மட்டும் தான் கடந்த இரண்டு தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்பதுகுறிப்பிடத்தக்கது.
மூப்பனார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விடுதலை சிறுத்தை அமைப்பின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அனைவரும் இணைந்து மதசார்பற்றகூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திங்கள் கிழமை திருநெல்வேலியில் நடக்கவிருக்கிறது. அப்போது தேர்தல் செயல்திட்டங்கள் குறித்துவிவாதிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.