குட்கா வழக்கில் கைதான தவெக நிர்வாகி இரவோடு இரவாக விடுவிப்பு.. ஈரோட்டில் ஷாக்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் குட்கா உடன் கையும் களவுமாக பிடிபட்ட தவெக நிர்வாகி அருண் என்பரை, இரவோடு இரவாக காவல் நிலைய பிணையில் போலீசார் விடுவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022ல் ஒன்றரை டன் குட்கா கடத்தியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் அருண்.
குட்காவை கார்களில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்ததாக தவெக நிர்வாகி அருண், ராம்குமார் ஆகியோரை கைது செய்து 8 கிலோ குட்கா, 3 கார்கள், ரூ.25,000 பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பவானி நகர தவெக செயற்குழு உறுப்பினர் அருண். இவர் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோர் குட்கா போதைப் பொருட்களை காரில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 8 கிலோ குட்கா, 3 கார்கள் ரூ.25,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
குடோன் அமைத்து குட்கா பொருட்களை விநியோகம் செய்ததாக அருண் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் இரவோடு இரவாக போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் அருண். குண்டர் சட்டத்தில் கைதானவர் மீண்டும் குட்கா பொருட்களுடன் கைது செய்யப்பட்ட போதும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருட்கள் புழக்கத்தை ஒழிப்போம் என தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பேசி வரும் நிலையில், ஆளுங்கட்சியான தவெக நிர்வாகி குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இரவோடு இரவாக விடுவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications