பூகம்ப பகுதியில் கொள்ளை: 3 போலீசார் சஸ்பெண்ட்
நாசிக்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திலுள்ள பூஜ் நகரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த ஜால்கான்போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 போலீஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஜால்கான் போலீஸார் கூறுகையில், பூஜ் நகரில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்தனர்.இதில் சுனில் விஸ்வநாத் பாபர் (36) என்பவர் தனது வீட்டையும், மகளையும் இழந்தார்.
அவரிடம் எஞ்சியிருந்த ரூ 21 லட்சம் பெறுமானமுள்ள பணம் மற்றும் நகைகளுடன் கார் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் பரோலாவில் உள்ள தனதுஉறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஜால்கான் போலீஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் விஜய் கோலி, அனந்த சவுத்ரி மற்றும் விஜய் ஹிரேஆகியோர், சுனிலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் அவர் வைத்திருந்த பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்து விட்டனர்.
இதையடுத்து சுனில் பாபர், ஜால்கான் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டசுனிலிடம் கொள்ளையடித்த மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்றனர்.
மேலும் ஜால்கான் போலீஸ் நிலைய தலைமை கண்காணிப்பாளர் பூஷன் குமார், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 கான்ஸ்டபிள்களையும்சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.