கடினமாகிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
டெல்லி:
இந்தியாவில் சமீபத்தில் தொடங்கிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி டெல்லியில் மிகவும் கடினமான காரியமாக உள்ளது என மக்கள் தொகைக்கணக்கெடுப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் 2001 ம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி மிகவும் சிரமமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி மிகவும் கடினமாக உள்ளது.
மிகப்பெரிய பங்களா வீடுகளில் வசிக்கும் மக்கள், நாங்கள் கணக்கெடுப்பு நடத்தப் போகும் சமயங்களில் அவர்கள் வீட்டுக் கதவுகளை திறப்பதில்லை. சிலர்,அவர்கள் வீட்டு வேலைக்காரர்களை அனுப்பி விவரங்களை சொல்கிறார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் அரசு ஊழியர்கள். அரசால் நியமிக்கப்பட்டவர்கள். ஆடம்பர பங்களா வீடுகளில் வசிக்கும் மக்கள், கொஞ்சம்கூட மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பதில்லை.
ஆனால் அரசு வீட்டு வசதி வாரியத்தில் குடியிருக்கும் மக்கள், எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.
குடிசை மாற்று வாரியத்தில் வாழும் மனிதர்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். குடிசை மாற்று வாரியத்தில் வாழும் மக்களின் சார்பில்அங்குள்ள பஞ்சாயத்துத் தலைவர் நாங்கள் கேட்கும் அனைத்துத் தகவல்களையும் கொடுக்கிறார்கள் என்றார்.
டெல்லி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் விமலா ஜிங்கார் கூறுகையில், மிகப்பெரிய ஜமீன்தார்கள் தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களின்எண்ணிக்கை, வாடகைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை, சொத்துக்கள் விவரம் ஆகியவை குறித்து சரியான தகவல்களைக் கொடுக்கமறுக்கிறார்கள்.
ஏனெனில் பிற்காலத்தில் வருமான வரி கட்டும் போது பிரச்சனை ஏற்படலாம் என்பதால் அவர்கள், சரியான தகவல்களைக் கொடுப்பதில்லை.
இருப்பினும் பொதுமக்கள், தங்களைப் பற்றிக் கொடுக்கும் விவரங்களை நாங்கள் மிகவும் ரகசியமாக வைத்திருப்போம். அதுகுறித்து மக்கள் கவலைப்படவேண்டியதில்லை என்றார்.
மேகாலயாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு:
இதற்கிடையே, மேகாலயாவில் பொதுமக்களை மிரட்டி அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டாம். பொதுமக்களிடம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பவர்கள், மக்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த மாநில அரசுஉத்தரவிட்டுள்ளது.
யு.என்.ஐ.