குஜராத்தில் மசூதி, சர்ச்களை கட்டப்போகும் ஆர்.எஸ்.எஸ்.
அஹமதாபாத்:
குஜராத் மாநிலம் கட்ச் உள்பட பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட 25 கிராமங்களில் உள்ள கோவில்கள், மசூதிகள், மற்றும்தேவாலயங்களை மீண்டும் கட்டுவோம் என்று ஆர்எஸ்எஸ் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து குஜராத் மாநில ஆர்எஸ்எஸ் அமைப்புச் செயலாளர் பிரவீண் மானியார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச், ராஜ்கோட், அகமதாபாத், சூரத் ஆகிய மாவட்டங்களும்,அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
பல கிராமங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இடிந்து தரைமட்டமாகி விட்டன. சுமார் 25 கிராமங்களைத் தேர்வுசெய்து அந்த கிராமங்களில் ரூ 3 கோடி செலவில் மீண்டும் தேவாலயங்கள் எழுப்ப ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.
மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் கட்டுவதற்கு குஜராத் அரசு பாதி நிதியுதவி அளிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் ரூ 75 லட்சம் நிதியுதவி அளிக்கும். இவற்றில் 25 லட்சம் இந்திய மக்களிடமிருந்து ஆர்எஸ்எஸ் சார்பில் வசூலிக்கப்பட்டவை. மீதி ரூ 50 லட்சம்வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் வசூலிக்கப்பட்டவை.
இவை தவிர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து 50 ஆரம்ப பள்ளிக்கூடங்கள் மற்றும் 100 சமுதாயக் கூடங்கள்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சில கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ பிரிவும் அனுப்பி வைக்கப்படும் என்றார் பிரவீண்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications