சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக புலிகள் மீண்டும் அறிவிப்பு
கொழும்பு:
இலங்கையில் அடுத்த ஒரு மாதத்திற்கு சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கப் போவதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடந்து வரும் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் நார்வே தூதுக்குழுவினர் முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்புகொடுக்கும் வகையிலும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கத் தீர்மானித்துள்ளோம்.
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள சண்டை நிறுத்தம் பிப்ரவரி 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சண்டை நிறுத்தம் அடுத்த ஒரு மாதம் வரைநீட்டிக்கப்படவுள்ளது என்று.
இவ்வாறு புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்றும்விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
புலிகள் வருத்தம்:
புலிகள் அறிவித்திருந்த சண்டை நிறுத்தத்தை, இலங்கை அரசு புறக்கணித்ததால் புலிகள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இலங்கையில் அமைதி ஏற்பட நாங்கள் செய்யும் முயற்சிக்கு இலங்கை அரசு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. இது எங்களைமிகவும் வருத்தமடையச் செய்கிறது.
அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நவீன ஆயுதங்களை பிற நாடுகளிலிருந்து வாங்கி ராணுவத்தைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் பலபில்லியன் ரூபாயை செலவழிக்கிறார். இதனால் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயமும் உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, சண்டை நிறுத்தத்தை நிராகரித்த இலங்கை அரசு, புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சமயத்தில், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரானதாக்குதல் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
இருப்பினும், சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அமைதிப் பேச்சுவார்த்தை என்பது சாத்தியமில்லாதது என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.