முல்லைவேந்தன் ராஜினாமா
சென்னை:
தமிழ்நாடு செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் முல்லைவேந்தன் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.
அற நிலையத்துறை அதிகாரியைத் தாக்கிய வழக்கிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவுபிறப்பித்ததையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கும், கவர்னருக்கும் வெள்ளிக்கிழமை காலை அனுப்பி வைத்தார் முல்லைவேந்தன்.
முன்னதாக, தர்மபுரியில் இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் இவருக்கும், தர்மபுரி அற நிலையத்துறை அதிகாரிஅன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் முல்லைவேந்தனின் ஆட்கள், அற நிலையத்துறை அதிகாரி அன்புமணியை தாக்கினர். முல்லைவேந்தன் முன்னிலையில் இந்தத்தாக்குதல் சம்பவம் நடந்தது.
பத்திரிக்கையில் வெளியான இந்த சம்பவத்தைப் பார்த்து முதல்வர் கருணாநிதி, இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில்அன்புமணி தாக்குதல் முல்லைவேந்தன் முன்னிலையில்தான் நடந்தது என்று தெரிய வந்தது.
இதையடுத்து, உடனடியாக அமைச்சர் முல்லைவேந்தன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் முல்லைவேந்தன் ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தின் தற்காலிக கவர்னர் ரங்கராஜன் ஹைதராபாத்தில் இருப்பதால், ராஜினாமாவைஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.