வாஜ்பாய் அரசு பதவி விலக முலாயம் கோரிக்கை
டெல்லி:
ஆயுத பேர ஊழலுக்குப் பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவரை கோரியுள்ளார் முன்னாள் பாதுகாப்புத்துறைஅமைச்சர் முலாயம் சிங் யாதவ்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,
பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண் சம்பந்தப்பட்டுள்ள இந்த ஆயுத பேர ஊழலுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்.
போபோர்ஸ் ஊழலுக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்புத்துறையில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலாகும் இது. இத்தகைய ஊழலில் ஆளுங்கட்சி மிகக் கேவலமாக ஒருலட்ச ரூபாய்க்கு நாட்டின் பாதுகாப்பை விற்றுள்ளது என குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சந்தோஷ் மோகன்தேவ் கூறும் போது, இந்த ஊழலில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும். இந்த ஊழலுக்குபொறுப்பேற்று பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும். இந்த கோரிக்கையை அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.
தே.ஜ. கூட்டணி கட்சிகளின் கருத்து:
குற்றச்சாட்டு தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் நிதிஷ் சென் குப்தா கருத்து தெரிவித்தார்.
ஆயுத பேர ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிட்ட தனியார் நிறுவனத்தை விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சார்பில் இத்தகைய செயல்களில்அந்த நிறுவனம் ஈடுபட்டதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கோரினார் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நவல் கிஷோர் ராய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications