தீவிரவாதியின் பூரி, பொங்கல் ஆசை
சத்தியமங்கலம்:
சிறையில் பொங்கல், பூரி வழங்க வேண்டும் என தமிழ் தீவிரவாதி இனியன் சம்பத் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் வீரப்பனின் கூட்டாளியும் தமிழ் தீவிரவாதியுமான இனியன் சம்பத் கைது செய்யப்பட்டார். இவர் மீது, கன்னட நடிகர்ராஜ்குமார் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான சம்பத், சென்னையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னை சிறையிலிருந்து சத்தியமங்கலம்நீதிமன்றத்தில் சம்பத் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டார். அங்கு மாஜிஸ்திரேட் சுப்ரமணியத்திடம், இனியன் சம்பத் கூறியதாவது:
எனக்கு காலையில் கொடுக்கப்படும் கேழ்வரகு கஞ்சி ஒத்துவரவில்லை, இதனால் வயிற்று வலி ஏற்படுகிறது. சிறையில் எனக்கு பூரி, பொங்கல்வழங்க வேண்டும். முகத்தில் தாடி வளர்ந்து விட்டது. இதனை எடுக்க வேண்டும் என்றால், சிறையில் வசதி இல்லை எனக் கூறுகின்றனர்.
ஆகவே நான் முகச் சவரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பூந்தமல்லி சிறையில் இருந்து கோவை அல்லது சென்னை மத்திய சிறைக்கு என்னைமாற்ற வேண்டும். எனக்கு படிக்க புத்தகங்கள், தினசரி எதுவும் வழங்கப்படவில்லை. அவை எனக்கு வழங்க வேண்டும் என்றார்.
இதனை குறித்துக் கொண்ட மாஜிஸ்திரேட், இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதாக கூறியுள்ளார். பின்னர் மார்ச் 27ம் தேதிவரை காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வரப்பட்ட இனியன் சம்பத், நிருபர்களிடம், சிறையில் ஆடு மாடுகளைப் போல நடத்துகின்றனர்.கொடுமைப்படுத்துகின்றனர் என்றார் ஆவேசமாக.