ஆயுத பேர ஊழல்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
டெல்லி
பாதுகாப்புத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழல் தொடர்பாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பாதுகாப்புத்துறைக்கான செய்தி தொடர்பாளர் ஒருவர் புதன்கிழமை டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் துறை இயக்குநரக அதிகாரி மேஜர் ஜெனரல் பி.எஸ்.கே.சவுத்ரி, ஆயுத தொழிற்சாலை வாரிய அலுவலர் ஹெச்.சி.பந்த்,பாதுகாப்புத்துறை துணை நிதி ஆலோசகர் நரேந்திர சிங், ராணுவ தலைமையக அலுவலர் பாங்குன்னி சசி ஆகிய 4 பேர் இந்த ஊழல் தொடர்பாக சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புத்துறையின் ஆயுத கொள்முதல் நடவடிக்கைகளில் நடைபெற்று வரும் ஊழல் தொடர்பாக தனியார் வெப்சைட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட வீடியோபதிவுகளில் இடம்பெற்ற இந்த நால்வர் மீதும் முதல் நிலை விசாரணை நடைபெற்றது. இதன் அடிப்படையில் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன் ஆயுத நிறுவனம் ஒன்றின் பெயரை கூறி வியாபாரம் செய்ய முயன்ற வெப்சைட் நிருபர்களிடம், இந்த அதிகாரிகள் கமிஷன் தொகை பெற்றுக்கொள்ளமுயன்றது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கருதப்படும் மற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற பாதுகாப்புத்துறை கூட்டத்தில் இந்த 4 பேரையும் சஸ்பெண்ட்செய்ய முடிவு செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்படை தளபதி சுஷில் குமார், பாதுகாப்புத்துறை செயலர் யோகேந்திர நாராயண் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தகூட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூட்டியிருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.