பதவி வெறியில் காங்கிரஸ்: வெங்கையா நாயுடு
சென்னை:
காங்கிரஸ் கட்சி ஆட்சி வெறி பிடித்து அலைவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டுகிறார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு,
மத்தியில் நிலையான ஆட்சி இருக்கும் போது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க விரும்புவதாக காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது அந்தகட்சிக்கு உள்ள பதவி வெறியை காட்டுவதாக உள்ளது.
கடந்த காலங்களில் பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன.
போபோர்ஸ் ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், பங்கு பத்திர ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது காங்கிரஸ் கட்சி பதவிவிலகவில்லை.
அதே காங்கிரஸ் கட்சி, தற்போதைய ஆட்சியாளர்கள் யாரும் நேரடியாக பங்கு பெறாத ஆயுத பேர ஊழல் தொடர்பாக பதவி விலக வேண்டும் எனகோருகிறது.
தமிழகத்தில் ஊழல் புரிந்ததற்காக தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதாவை பதவியில் அமர்த்த கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது காங்கிரஸ்.
பீகாரில் கால்நடை தீவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லல்லு பிரசாத் யாதவின் கட்சியுடன் இணைந்து லல்லுவின் கட்சி ஆட்சி புரிய வழிகண்டதுகாங்கிரஸ்.
இப்படி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை பதவியில் வைத்து பார்க்க விரும்பும் காங்கிரஸ் கட்சி ஆயுத பேர ஊழலுக்காக வாஜ்பாய் அரசு பதவிவிலக வேண்டும் என கோருகிறது. இந்த ஊழலில் வாஜ்பாய் அரசு நேரடியாக சம்பந்தப்படவில்லை.
டெஹல்கா டாட் காம் நிறுவனம் கூறிய ஆயுத பேர ஊழல் பற்றிய தகவல்களால் தமிழகத் தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படாது.
நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான ஆயுதங்கள் வாங்கும் போது இனிமேல் தரகர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.