தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள்: ஆலடி அருணா
கோவை:
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தமிழகம் முழுவதும் 49 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தமிழக சட்டத் துறைஅமைச்சர் ஆலடி அருணா தெரிவித்தார்.
கோவையில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்குக் கூடத்தை மாநில சட்டத் துறை அமைச்சர்ஆலடி அருணா திறந்து வைத்து பேசியதாவது:
மாநிலம் முழுவதிலும் 2.38 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. வழக்குகள் தேக்கமடைந்திருப்பதால், ஏழை எளிய மக்களுக்கு நீதிகிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே தமிழகத்தில் தேக்கமடைந்த வழக்குகளை விரைந்து முடிக்க 49 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக கோவையில்இரண்டு விரைவு நீதிமன்றங்கள் உட்பட 20 நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளது. துரிதமாக வழக்குகளை முடிக்க வழககறிஞர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படும் போது கட்டப் பஞ்சாயத்து தாதாக்கள், சமூக விரோதக் கும்பல்களின் அதிகார ஆதிக்கம் மேலிடுகிறது.சட்ட உதவி மையத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் 2.3 லட்சம் வழக்குகளை தீர்த்து வைத்துள்ளோம் என்றார் ஆலடி அருணா.
விழாவில்உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் பேசுகையில்,
கடந்த 19ம் நூற்றாண்டில் வழக்கறிஞர்களுக்கு ஒரு சிறப்பு இருந்தது. தேச விடுதலைக்காக போராட்டம் நடத்திய சமுதாயமாக வாழ்ந்துள்ளனர்.இதனைப் பின் பற்றி வந்துள்ள வழக்கறிஞர்கள், இப்போது ஏழை எளிய மக்களின் அறியாமையை நீக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும்வழிகாட்டியாக செயல்பட வேண்டும்.
வழக்கீல்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள கடைசி ஆயுதமான நீதிமன்ற புறக்கணிப்பை உடனே கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வேறு வழிகள் எவ்வளவோ உள்ளன. வக்கீல்கள் போராட்டத்தால் வழக்குகள் தேங்கி, அப்பாவி மக்களுக்கு உடனடியாக நீதிகிடைக்காமல் போய் விடும் எனவே, கோரிக்கைகளை வலியுறுத்த வேறு வடிகால்களைப் பயன்படுத்த வேண்டும் என பேசினார்.