திமுக கூட்டணியில் திருநாவுக்கரசு அதிருப்தி
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.ஜி.ஆர். அதிமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டு விட்டன.
இன்னும் எம்.ஜி.ஆர். அதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும்தான் சீட் ஒதுக்கீடுமுடிவடையாமல் உள்ளது.
இரு கட்சிகளும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் தேவை என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு திமுக தலைமை மறுத்து விட்டதாகவும்கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு புதன்கிழமைக்குள் முடிவடைந்து விடும் என்று திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுத்தலைவர் ஆற்க்காடு வீராசாமி செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு புதன்கிழமை, அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும், முதல்வருமானகருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியில் வந்த திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 தொகுதிகள் தருவதாக திமுக கூறுகிறது. ஆனால் நாங்கள்கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
2 தொகுதிகள் தருவதாக திமுக கூறியுள்ளது குறித்து வரும் 24ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.அதன் பிறகு எங்களது முடிவை அறிவிப்போம் என்றார்.