மூப்பனாரின் விசுவாசி மீது கொலை மிரட்டல் வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கவுன்சிலருமான வெற்றிவேல் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவர் சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலின் மீது பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலினுக்கு பெரும்தலைவலியாக விளங்குபவர். மூப்பனாரின் தீவிர விசுவாசி. மூப்பனாருக்கு மிகவும் நெருக்கமானவர்.
வெற்றிவேல் மீது பதிவாகியுள்ள வழக்கு குறித்த விவரம்:
சென்னை அசோக்நகர் 10 வது அவென்யூவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதிவெற்றிவேலின் மகன் கணேஷ் (15) மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.
அப்போது கணேஷ் கடையில் ஏதோ ஒரு பொருளைத் திருடியதால், உடனடியாக கடையில் உள்ளவர்கள் அவரைப் பிடித்து கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன்என்ற ராம்கியிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, கணேசிடம், கடை உரிமையாளர் விசாரணை நடத்தியபோது அவர் தமாகா பிரமுகர் வெற்றிவேலின் மகன் என்று தெரிய வந்தது. உடனடியாக,கணேசனின் தாய் சுமதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமதி கடைக்குச் சென்று விசாரித்த போது தான் திருடியது உண்மைதான் என்று கணேஷ் ஒப்புக் கொண்டார். உடனே மன்னிப்பு கடிதம் கொடுத்தால்தான்விடுவேன் என்று கடை உரிமையாளர் ராம்கி கூறினார். சுமதியும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து மகனை மீட்டு வந்தார்.
இந்த விஷயம் குறித்து மிகவும் தாமதமாகத் தெரிந்து கொண்ட வெற்றிவேல், இதுகுறித்துப் பேசுவதற்காக ராம்கியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குவரச் சொல்லியிருக்கிறார்.
உடனே, தனது நண்பரும், தமாகாவைச் சேர்ந்தவருமான கார்த்திக் என்பவருடன் ராம்கி, வெற்றிவேலைச் சந்திக்கச் சென்றார்.
ராம்கி சென்ற காரிலேயே அவரை அழைத்துக் கொண்டு சென்ற வெற்றிவேல் காரில் வைத்து ராம்கியை தாக்கினார் என்று தெரிகிறது. பின்னர்துப்பாக்கியால் மிரட்டி தனது மகனிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியதால் அதற்கு அபராதமாக ரூ 5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் கொலைசெய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது மனைவி சுமதி மற்றும் மகன் கணேஷ் இருவரிடமும் மன்னிப்புக் கேட்கச் சொன்னாராம். அதன்படிராம்கி மன்னிப்பு கேட்டார்.
அதற்குப்பிறகு வெற்றிவேல் கேட்ட தொகையில் 1.6 லட்சத்தை ராம்கி கொடுத்தார். இருப்பினும் மீண்டும், மீண்டும் பணம் கேட்டுத் தொந்தரவுகொடுத்தார் வெற்றிவேல்.
இதையடுத்து, ராம்கி குமரன் நகர் போலீசில் வெற்றிவேல் மீது புகார் கொடுத்தார். போலீசார் ஆள்கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.