கலகலக்கிறது இந்தியாவின் கம்யூனிஸ்ட் கோட்டை
டெல்லி:
திரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், மேற்குவங்காளத்தின் முதல்வராகும் மம்தா பானர்ஜியின் கனவுபலிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சார்பில் டெல்லியை சேர்ந்த டெவலப்மெண்ட் அன்ட் ரிசர்ச் சர்வீசஸ் அமைப்பு, மேற்கு வங்காளத்தின் 12 தொகுதிகளில்கருத்துக்கணிப்பு நடத்தியது.
1800 பேர் வரை கலந்து கொண்ட இந்த கருத்துக்கணிப்பில், திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக ஆதரவு கிடைத்து உள்ளது.
கடந்த 24 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தை ஆண்டு வரும் இடது சாரி முன்னணிக்கு இந்த தேர்தலில் முதன்முறையாக தோல்வி ஏற்படும் எனகருதப்படுகிறது.
இடது சாரி கூட்டணிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ள ஆதரவில் குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது.
இருவருக்கும் சாதகமாக முடிவெடுக்காத 5 சதவீத வாக்காளர்கள் தேர்தலின் போது எந்த கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ அந்தகூட்டணி வெற்றி பெறும்.
முதலமைச்சர் பதவிக்கு மம்தாவை விட புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு அதிக ஆதரவு இருக்கிறது. அது போல் நிர்வாகத் திறனை பொறுத்தவரைஇடது சாரிக் கூட்டணிக்கு ஆதரவு அதிகம் காணப்படுகிறது.
இத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது அக்கட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை விட இடது சாரிக்கூட்டணிக்கு எதிராகஅளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாகத்தான் அது இருக்கும் என இக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவித்து உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.