ம.தி.மு.க. வெளியேறியதால் பாதிப்பில்லை: பா.ஜ.க.
சென்னை:
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதால் பாதிப்பு இல்லை. அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெறும் என பா.ஜ.க. தலைவர்ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் பின் நிருபர்களிடம் பேசியகிருஷ்ணமூர்த்தி,
கடந்த 8 ஆண்டுகளாக டெல்லியில் இருந்ததால் திமுக தலைவரை நேரில் சந்திக்க முடியவில்லை.
தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் என்ற முறையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து பேசினேன். இது ஒருமரியாதை நிமித்தமான சந்திப்பு.
தேசிய ஜனநாய கூட்டணியில் திமுகவும் இடம்பெற்று இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மற்றும் கேரளா அரசியல்நிலை குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன்.
தமிழகம், பாண்டிச்சேரி பற்றி அவருக்கு தெரியும். தமிழகத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் வாஜ்பாய் வருவது குறித்து மத்திய தேர்தல் குழுவிரைவில் கூடி முடிவெடுக்கும்.
அக்கூட்டத்திற்குப்பின் 5 மாநிலங்களின் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர கூட்டணி கட்சிகளின் தொகுதிகளிலும் பா.ஜ.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறினாலும், திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெறும் என தெரிவித்தார்.அவருடன் பா.ஜ.க.வின் தமிழக பொதுச்செயலாளர் இல.கணேசன், தேர்தல் பொறுப்பாளர் ராமாராவ் ஆகியோர் கருணாநிதியை சென்று சந்தித்தனர்.