அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார்: பாண்டிச்சேரி காங்.
சென்னை:
பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்குகாங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் புதன்கிழமை தெரிவித்தார்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பியபாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து மூப்பனாரை நேரில்சந்தித்து சில விவரங்களைக் கூறியுள்ளேன்.
நான் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பாண்டிச்சேரி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்துக் கூறினேன்.
மூப்பனாரை புதன்கிழமை மீண்டும் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசுவேன்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பாண்டிச்சேரியில் 17 தொகுதிகளில் அதிமுகவும், 13 தொகுதிகளில்பாமகவும் போட்டியிடுகிறது என்று கூறியுள்ளார். பாண்டிச்சேரியில் அவர்களது நிலை குறித்து ஜெயலலிதாகூறியுள்ளார். அது அவரது கருத்து. அதுகுறித்து நான் எதுவும் கூற முடியாது.
பாண்டிச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னமும்காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்றார் சண்முகம்.
முன்னதாக, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பாமக இருக்கும் அதிமுக கூட்டணியில் ஒரு போதும் நாங்கள்கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்படியும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலானமதச்சார்பற்ற கூட்டணி ஜெயித்தால் முதல் இரண்டரை ஆண்டுகள் பாமகவுக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள்காங்கிரசுக்கும் ஆட்சி பகிர்ந்து கொடுக்கப்படும் என்றும் அதிமுக கூறியது.
இதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. ஆனால் தற்போது சண்முகம் கூறியுள்ள கருத்துக்கள் பாண்டிச்சேரியில்அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து மீண்டும் பரிசீலனை செய்வது போல் அமைந்துள்ளது.
தற்போது பாண்டிச்சேரியில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூப்பனாரிடம்ஆலோசனை நடத்தி வருகிறார் சண்முகம்.
யு.என்.ஐ.