ஜெ. அவரச அறிவிப்பால் மூப்பனார் அதிர்ச்சி
சென்னை:
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுப் பங்கீடு குறித்து ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே தீடீரென அதிமுகபோட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள்அதிர்ச்சியடைந்து உள்ளன.
குறிப்பாக த.மா.கா. தொண்டர்களிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியேவேண்டாம் என்று பலர் கூறத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஜெயலலிதாவுடன் சேர்ந்தால் இதையெல்லாம் நாம் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும் என அவர்களுக்கு மூப்பனார் சமாதானம் சொல்லி வருகிறார்.
மூப்பனார் அமைதியாக இருந்தாலும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணுவும்ஜெயலலிதா செய்தது தவறு என குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 39 இடங்களில் வென்றது. இப்போது இந்த 39ல் 20தொகுதிகளை ஜெயலலிதா எடுத்துக் கொண்டுவிட்டால், இந்த 20 த.மா.கா. எம்.எல்.ஏக்களுக்கும் மூப்பானாரால் மீண்டும் சீட்கொடுக்க முடியாது. இவர்களை தொகுதி மாற்றி நிறுத்த வேண்டும். இதற்கு த.மா.காவிலேயே எதிர்ப்பு கிளம்பும்.
தனது தொகுதியில் அடுத்த தொகுதியைச் சேர்ந்தவர் போட்டியிடுவதா என்ற ஈகோ பிரச்சனை நிச்சயம் தலையெடுக்கும். அந்தநிலையில் கட்சியினர் முழு மனதுடன் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள் என்ற அச்சமும் த.மா.கா. தலைவர்களுக்கு உள்ளது.
ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பெற கடந்தமுறை போட்டியிட்ட தொகுதியில் போட்டியிட்டால் தான் நல்லது என்றநிலையில் அதில் கையை வைத்திருக்கிறார் ஜெயலலிதா. இது த.மா.கா. எம்.எல்.ஏக்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
த.மா.கா. எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி:
இதனால் தான் அவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தாங்கள் கடந்தமுறை போட்டியிட்டு வென்ற தொகுதிகளையேதங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அதனை மூப்பனாரிடமும் ஒப்படைத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களான சோ.பாலகிருஷ்ணன் போன்றவர்களின் தொகுதிகளையும் அதிமுக எடுத்துக்கொண்டது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.