களத்தில் நிற்கும் 104 பெண் வேட்பாளர்கள்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் 104 பெண்களே களத்தில் உள்ளனர். கடந்த தேர்தலை விட இது 52 பேர் குறைவாகும்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தசட்டசபைத் தேர்தலில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் போட்டியிட 1857 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும், சுயேச்சையாகவும் 156 பெண்கள் போட்டியிட்டனர்.ஆனால் இந்தத் தேர்தலில் 104 பெண்கள்தான் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
அரசியல் கட்சிகள் சார்பாக 50 பெண்கள் போட்டியிடவுள்ளனர். மீதமுள்ள 54 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.
அதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள்தான் அதிக பெண்களைத் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளன. இரு கட்சிகளின் சார்பாக, தலா20 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா ஆகியவை தலா ஒரு பெண் வேட்பாளரைப் போட்டியில்நிறுத்தியுள்ளன.