போலி தீவிரவாதி கைது
ஜலந்தர்:
தான் போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்று பொய் கூறி, பொதுமன்னிப்பு பெற்று, அரசின் சலுகைகளைப் பெற நினைத்தமுன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பஞ்சாப் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பல்விந்தர் சிங். வயது 30. இவர் 1989 ம் ஆண்டு லூதியானாவில் போலீஸ் கான்ஸ்டபிளாகவேலை செய்து வந்தார்.
இவரது சகோதரரும் காவல் துறையில் பணியாற்றியவர். அப்போது பணியில் இருக்கும் போது இவரது சகோதரர் உயிரிழந்தார்.
இதையடுத்து பல்விந்தர் தனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை 1996 ம் ஆண்டு ராஜினாமா செய்தார். பின்னர் போலந்து, இத்தாலிஆகிய நாடுகளுக்குச் வேலை தேடிச் சென்றார். பின்னர் 2000 மாவது ஆண்டில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார்.அங்கும் அவருக்கு வேலைகிடைக்கவில்லை.
சுவிட்சர்லாந்தில் குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு மாத சலுகையாக 280 சுவிஸ் பிரான்சுகள்கிடைக்கும்.
அதனால், தான் குற்றவாளி என்று கூறிக் கொண்டும், தான் இந்தியாவில் பஞ்சாப் போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிஎன்றும் பொது மன்னிப்பு மனு மூலம் சுவிட்சர்லாந்து காவல்துறைக்கு இவர் விண்ணப்பித்தார்.
ஆனால் குற்றவாளி என்பதற்கான சான்றிதழ்கள் சரியாக இல்லாத காரணத்தால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா திரும்பிய பல்பிந்தர், சுவிட்சர்லாந்து போலீஸாரிடம் தான் ஒரு குற்றவாளி என்று காண்பிப்பதற்காகடெல்லியில் போலி தஸ்தாவேஜூகள் மற்றும் இதர ஆவணங்களைத் தயார் செய்தார்.
ஆனால் அவரது திட்டம் தவிடுபொடியானது. அவர் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
யாருமே செய்யத்துணியாத இந்தச் செயலை செய்த மாஜி போலீஸ் கான்ஸ்டபிளை கோர்ட்டுக்கு கொண்டு செல்லவுள்ளனர் டெல்லிபோலீஸார்.
யு.என்.ஐ.