பஸ் ஆற்றில் கவிழ்ந்தது: 40 பக்தர்கள் சாவு
நைனிடால்:
ஹரித்துவார் அருகே பத்ரிநாத் கோவிலுக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்ததால் 40 க்கும் மேற்பட்டபக்தர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஹரித்துவார் போலீஸார் கூறுகையில், பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் கோவிலுக்கு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பஸ் அலக்நாடா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.இந்த விபத்து திங்கள்கிழமை இரவு நடந்தது.
ஆற்றில் வெள்ளம் மிக வேகமாக வந்து கொண்டிருந்த காரணத்தால் பக்தர்களின் சடலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டுமின்றி பஸ்சும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்றனர்.
பத்ரிநாத் கோவில் திருவிழாவின் போது இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மலைப்பகுதியில் உள்ள இந்தக்கோவில் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.