மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேருமா பா.ம.க.?
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் வியாழக்கிழமை நடத்து முடிந்து விட்டது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலைகாணப்படுவதால், தேர்தலுக்கு பின் ஏற்படக்கூடிய கூட்டணி மாற்றங்களுக்கான செயல்பாடுகள் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.
தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்த பா.ம.கவை மீண்டும் தி.மு.க.கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் தி.மு.க.ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பா.ம.க. வட தமிழ்நாட்டில் பலம் பெற்ற கட்சி. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.கவுக்கு 27தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
பா.ம.க 15 முதல் 18 இடங்களில் வெற்றி பெறும் என தி.மு.க. நினைக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பான்மைகிடைக்காகவிட்டால் பா.ம.க. ஆதரவு அளித்தால் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியும். அதற்கு பா.ம.கவை சம்மதிக்க வைக்கும்முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ராமாதாசின் கனவு பாண்டிச்சேரி ஆட்சி. பாண்டிச்சேரியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் அவருக்கு பாண்டிச்சேரி ஆட்சியை விட்டுக்கொடுத்து தமிழகத்தில் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க.செயல்பட்டு வருகிறது.
பாண்டிச்சேரி ஆட்சி, மத்திய அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவி ஆகியவை பா.ம.கவுக்கு கொடுக்கப்பட்டால் ராமதாஸ்தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்து தே.ஜ.கூட்டணியில் மீண்டும் இணைவார் என்ற கணக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மேலோட்டமாக பேசப்பட்டதாகவும் இதற்கு ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.இதுபற்றி கேள்விப்பட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் ராமதாஸ் கருத்தை அறிவதற்காக தினகரனை திண்டிவனத்திற்குஅனுப்பியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.