உடுமலை குண்டுவெடிப்பு: 9 பேருக்கு ஆயுள்தண்டனை
கோவை:
உடுமலைப் பேட்டையில் நடந்த சைக்கிள் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை கோவை தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 1997 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம்தேதி உடுமலைப் பேட்டையில் ஒரு வணிக வளாகத்தின் முன்புநிறுத்தப்பட்டிருந்த சைக்களில் இருந்த குண்டு வெடித்தது.
இந்தசம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள் பலியாகினர். பாப்பம்மாள்,நாச்சம்மாள், விஜயலட்சுமி ஆகியோர் இதில் இறந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் குண்டு வைத்தது தொடர்பாக கோவை கோட்டைமேட்டைச் சேர்ந்த முகமது பஷீர், குனியமுத்தூரைச் சேர்ந்தயூசுப் உசேன், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முகமது அலிகான்குட்டி, பழனியைச் சேர்ந்த அப்துல் கரீம், அப்துல்ரஷீத், கர்நாடக மாநிலம் சம்சுத் அகமது, முகமது தஸ்தஹீர், உக்கடத்தைச் சேர்ந்த சுலைமான் என்ற ஜஹாங்கீர்,உடுமலையைச் சேர்ந்த அப்துல் கயூம், சுல்தான் நாசர் என்ற சமீர், மைசூரைச் சேர்ந்த ரியாசூல் அகமதுஆகியோரைக் கைது செய்தனர்.
இதில் மைசூர் வெடிமருந்து தொழிற்சாலையைச் சேர்ந்த ரீயாசூல் அகமது அப்ரூவராக மாறி விட்டதால் அவர்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 10 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்கும் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு என ஏற்படுத்தப்பட்ட தனி நீதிமன்றத்தில் நடந்தது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் செவ்வாயன்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகமது தஸ்தஹீரைத் தவிர மற்ற 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துதீர்ப்பளித்தார். ரீயாசூல் அகமது அப்ரூவராக மாறியதால் விடுதலை செய்யப்பட்டார்.