அக்னியில் அல்லாடும் சென்னை!
அக்னி நட்சத்திரம் சென்னைவாசிகளை தாளித்து எடுக்கிறது. உலர்ந்த நாவுகளுடன், வெறும் உடல்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் சென்னைமக்கள்.
சென்னையில் வெயில் அடிப்பது புதிதல்ல. ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா வருவது போல ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் கோலாகலமாக வந்துசென்னை மக்களை வறுத்தெடுக்கும்.
ஆனால் இதுவரை இல்லாத அளவு இந்த முறை வெயில் கடுமையாக உள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே இந்த நிலைதான்.ஆனால் சென்னையில் மட்டுமே எப்போதுமே வெயில் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கும்.
தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் உஷ்ணம் மிகக் கடுமையாக இருக்கிறது. சாலைகளில் நடந்து செல்வோர் எண்ணிக்கைமிகவும் குறைவாகவே இருக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் கூட பிற்பகலில் மிகவும் குறைவாகவே உள்ளது.
நகரத்தில் எந்த பகுதியுமே வெயிலின் வீச்சுக்குத் தப்பவில்லை. நகரில் மரங்கள், செடி, கொடிகளின் எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குஇல்லாததால், பசுமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது. நிழலுக்குக் கூட ஒதுங்க முடியவில்லை எங்குமே.
தினசரி காலை 5.45 மணிக்கே துவங்கி விடுகிறது வெயிலின் விளையாட்டு. 6 மணி ஆகும்போதே வெயில் சுள்ளென்று உரைக்கத் தொடங்குகிறது. 6.30மணிக்கு வந்து வெளியில் பார்த்தால், 10 மணி போல தோன்றும். அப்படி ஒரு வெயில். வெயில் என்றால் சும்மா இல்லை, வெள்ளை வெளேர் என்றுகண்ணைக் கூச வைக்கும் ஒரு வெயில்.
7-8 மணிக்கு சாலைகளில் செல்வோர், கையில் பேன் கொண்டு செல்லாத குறையாக, கர்சீப், பேப்பர், பைல்கள் என கையில் கிடைத்ததை வைத்து விசிறிக்கொண்டும், கழுத்தில், நெற்றியில், கையில் என வழியும் வியர்வையை துடைத்தும் கொண்டும் அவஸ்தையாக நடந்து கொண்டிருப்பது சென்னையின் வழக்கமானவிஷயமாகி விட்டது.
காலையில் ஜாகிங் போவது கூட சென்னையில் மிகவும் கொடுமையான விஷயமாகி விட்டது. வியர்வையை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதற்குத்தான ஜாகிங், வாக்கிங் என சில உடற்பயிற்சிகளை செய்கிறோம். ஆனால் நாள் பூராவும் வியர்வை ஆறு ஓடிக் கொண்டிருக்கையில்,ஜாகிங் வேறு ஒரு கேடா என்று பலர் நினைத்து விட்டார்கள் போலும். சென்னையில் ஜாகிங் போவோரை காலையில் பார்ப்பது மிகவும் அரிது.
அப்படியே ஜாகிங், வாக்கிங் போனாலும் கூட மரங்கள் நிறைந்த சாலைகளில் மட்டுமே, அதுவும் 6 மணிக்குள் மட்டுமே பார்க்க முடிகிறது.அதற்கு மேல் அவசரம் அவசரமாக வீடுகளுக்கு ஓடி விடுகிறார்கள்.
காலையில் துவங்கும் வெயில் முடிவது மாலையில் என்று நினைத்தால் அதுதான் இல்லை. இரவு 7 மணி வரை வெயிலின் சூடு போவதில்லை. 7 மணிக்குமேல்தான் லேசாக வெம்மை குறைந்து, மாலை வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். 8 மணிக்கு மேல் கொஞ்சம் அணல் குறைந்து சுமாரானசூழ்நிலை ஏற்படும். 9-10 மணிக்கு மேல்தான் ஓரளவு வியர்ப்பது நிற்கும். ஆனாலும் சூடு மட்டும் குறையாது. மாடிகளில் தண்ணீரை ஊற்றி, சூடுவீட்டுக்குள் இறங்காமல் செய்வது ஒரு தடுப்பு முயற்சியாக சென்னைவாசிகள் கடைப்பிடிக்கும் வழக்கம்.
மதியத்தில் வெளியே செல்ல நினைப்பவர்கள் தற்கொலைக்குத் துணிந்தவர்கள் என்றுதான் கூற வேண்டும். 12-1 மணியளவில் சென்னைத் தெருக்களில் நடந்துசெல்பவர்கள் மிகவும் துணிகரமானவர்கள். எரிமலைக்கு நடுவில் நின்று, கொதிக்கும் நீரில் குளிப்பது போல ஒரு கொடூரமான அனுபவம் அது.
ஒரு பக்கம் வியர்வை ஆறாக ஓடிக் கொண்டிருக்கும், மறுபக்கம் கால் வழியாக உடலுக்குள் பரவும் அ னலை எப்படி சமாளிப்பது என மனசு துடித்துக்கொண்டிருக்கும். இதில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருப்பவராக இருந்தால், அவர் ஏதோ ஒரு பிறவியில் பெரும் பாவம் செய்தவராக இருக்க வேண்டும்.நரக வேதனை அது.
பஸ்சை பிடித்து விட்டு ஒரு வழியாக ஏறி உள்ளே சென்று விட்டால் செத்தார் அந்த நபர். பஸ்சுக்குள் இருக்கும் கூட்டம், படு பயங்கரமான கூட்டம். அப்படியேநிற்கும், நகராது. நகர்ந்தாலும், அவர்களது வியர்வையை அப்படியே நமது சட்டையில் துடைத்து விட்டுத்தான் செல்வார்கள். சக பயணிகளின் உரசல்கள்,வியர்வை நாற்றம் என குடலே வெளியே வந்து விடும் அளவுக்கு குமட்டி எடுத்து விடும்.
தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டுள்ளதால் சென்னையில் வெயில் கடுமையாக அடிக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்துவிடும் என்பதால் அதற்குப் பிறகு வரப் போகும் குளுமையை நினைத்து வெயிலை மறக்க முயற்சித்து வருகிறார்கள் சென்னை பொது ஜனங்கள்.












Click it and Unblock the Notifications