TCSல் வேலை பார்க்குறீங்களா? உங்க வருமானம் மாறப்போகுது! மொத்த சம்பள அமைப்பில் அதிரடி மாற்றம்!
சென்னை: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது சம்பள அமைப்பில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. புதிய சட்டங்களின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை அவரது மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட விதிகளுக்கு ஏற்ப தனது ஊழியர்களின் சம்பள அமைப்பை மாற்றியமைத்துள்ளது. இத்தகைய பெரிய மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்த முதல் முன்னணி கார்ப்பரேட் நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு (Q1 FY27) நிதிநிலை முடிவுகளை வெளியிடும் போது இந்த முக்கிய அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டது. மற்ற ஐடி நிறுவனங்கள் இந்த விதிகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் டிசிஎஸ் நிறுவனம் இந்த விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

புதிய தொழிலாளர் சட்டங்கள் என்றால் என்ன?
மத்திய அரசு தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 முக்கிய சட்டத் தொகுப்புகளாக மாற்றியுள்ளது. அவை:
1. ஊதிய விதிகள்
2. தொழில்துறை விதிகள்
3. சமூக பாதுகாப்பு விதிகள்
4. தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை பாதுகாப்பு விதிகள்
தொழிலாளர் விதிமுறைகளை எளிமையாக்குவதும், பிஸ்னஸ் செய்வதை எளிதாக்குவதும், தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புப் பலன்களை விரிவுபடுத்துவதும் இதன் நோக்கமாகும். இந்த 4 விதிகள் சேர்ந்ததுதான் புதிய தொழிலாளர் சட்டம்.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இன்னும் நாடு முழுக்க இந்த விதிகள் அமலுக்கு வரவில்லை. மாநிலங்கள் இதை ஏற்றுக்கொள்வதை பொறுத்தே இது நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?
புதிய சட்டங்களின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை அவரது மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்டும். தற்போது பல நிறுவனங்கள் அடிப்படை ஊதியத்தைக் குறைவாகவும், இதர படிகளை அதிகமாகவும் வைத்துள்ளன. இதன் மூலம் நிறுவனங்களின் செலவுகள் குறைகின்றன. ஆனால், புதிய விதியின்படி அடிப்படை ஊதியத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள்
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த சம்பள மாற்றத்தால் ஊழியர்களின் வருமானத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படும்:
அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் போது, அதிலிருந்து கணக்கிடப்படும் தொழிலாளர் வைப்பு நிதி பங்களிப்பும் அதிகரிக்கும். இதனால் ஊழியர்களின் கையில் கிடைக்கும் மாதாந்திரச் சம்பளம் சற்று குறைய வாய்ப்புள்ளது.
மாதாந்திரச் சம்பளம் குறைந்தாலும், நீண்ட கால அடிப்படையில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் சேரும் தொகை பெருமளவில் அதிகரிக்கும். இது எதிர்கால ஓய்வூதிய பாதுகாப்பை உறுதி செய்யும்.
கிராஜுவிட்டி தொகையும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுவதால், ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் போதோ அல்லது ஓய்வு பெறும் போதோ கிடைக்கும் பணிக்கொடைத் தொகை கணிசமாக உயரும்.
புதிய சட்டத்தின்படி, ஒப்பந்த அல்லது குறிப்பிட்ட கால ஊழியர்கள் ஓராண்டு தொடர் சேவை முடித்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்த புதிய விதிகளைத்தான் தற்போது டிசிஎஸ் அறிமுகம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications