திமுகவ பாருங்க.. இளைஞரணி வாழ்றாங்க! அதிமுகல அப்படியே தலைகீழ்! கொட்டித் தீர்த்த ரத்தத்தின் ரத்தங்கள்!
சென்னை: 2026 தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி அதிமுகவில் உருவாகி இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கவில்லை எனவும் தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் இளைஞரணியினர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு இது 11வது தோல்வி என விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயும் பணி அதிமுகவில் தொடங்கி இருக்கிறது.
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 23 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அதிமுக
இந்த கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மீதமுள்ள மாவட்டங்களுக்கான அடுத்தகட்ட ஆலோசனை கூட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 15ஆம் தேதி ஈரோடு, திருவள்ளூர், தேனி மாவட்ட நிர்வாகிகளையும், ஜூலை 16ஆம் தேதி புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட நிர்வாகிகளையும், ஜூலை 18ஆம் தேதி கரூர், நீலகிரி மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அதிமுக இளைஞரணி
இதற்கிடையே அதிமுக இளைஞரணி மாநில செயலாளர் முன்னாள் எம்பியுமான விஜயகுமார் தலைமையில் மாநில மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி, இளைஞரணி செயல்பாடு மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இளைஞரணி நிர்வாகிகள்
கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படையாக கொட்டித் தீர்த்து இருக்கின்றனர். குறிப்பாக கட்சிக்காக பல ஆண்டுகளாக விசுவாசமாக உழைத்து வரும் தங்களுக்கு கட்சியில் எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். எதிரணியான திமுகவில் இளைஞர் அணிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதிமுகவில் இளைஞர் அணி என்ற ஒன்றே இருக்கிறதா என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள்.
வேதனை
அது மட்டுமல்லாமல் அதிமுகவில் இணைந்து ஏதாவது ஒரு பதவியை பெற்று வேறு அரசியல் கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தொடர்ந்து கட்சியிலேயே பயணிக்கும் நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவித்து இருக்கின்றனர். தலைமையின் இதுபோன்ற அணுகுமுறை அடிமட்ட தொண்டர்களின் மன உறுதியை பாதித்திருப்பதாகவும் அவர்கள் சொன்னதாக தகவல்கள் உலாவுகின்றன.
பூத் கமிட்டி
சட்டசபைத் தேர்தலில் இளைஞர் அணியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு போதிய வாய்ப்புகளும் தேர்தல் பணியாற்ற வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்பது கூட்டத்தில் வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு, தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படும் பூத் கமிட்டிகளில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என பலரும் குறை கூறியுள்ளனர். மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இளைஞர் அணியினரை தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தவில்லை என்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமுறை
இளைஞர்களுக்கு பொறுப்புகளும் வாய்ப்புகளும் வழங்கப்படாத நிலையில் புதிய தலைமுறையை கட்சிக்குள் எப்படி கொண்டுவர முடியும் என கேள்வியையும் அவர்கள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களில் இளைஞர் அணி புறக்கணிக்கப்பட்டதும் ஒரு காரணம் எனவும் தேர்தல் நேரத்தில் அவர்களது பங்களிப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தலைமை தவறியதால் பல தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
உரிய அங்கீகாரம்
இதையடுத்து, இனிமேலாவது கட்சிக்காக உண்மையாக உழைக்கும் நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரமும் பொறுப்புகளும் வழங்க வேண்டும் என்றும், விசுவாசமான தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜயகுமார், கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இளைஞர்கள்
அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் அதிகளவில் இளைஞர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அமைப்பு ரீதியாக இளைஞரணியை வலுப்படுத்த மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.














Click it and Unblock the Notifications