Gen Zயால் வந்த வம்பு.. படிப்பு, சர்டிபிகேட் இருந்தாலும் வேலை கிடைப்பதில்லை! சிங்கப்பூரில் புதிய செக்
சிங்கப்பூர்: இந்தக் காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை எந்தளவுக்குக் கடினமாக மாறிவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு வேலை கிடைப்பதே பெரும் போராட்டமாகப் பலருக்கும் இருக்கிறது. இதற்கிடையே வேலைக்கு விண்ணப்பித்த ஒருவரிடம் அவரது திறமைகள், அனுபவம் குறித்து கேட்பதற்குப் பதிலாக வேறு ஒரு விஷயத்தையே வேலைக்கு எடுப்பவர் கேட்டு வந்தாராம்! தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர், வேலை தேடும் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை ரெட்டிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜூலை 5ம் தேதி அவர் பதிவிட்ட இந்த போஸ்ட் இணையத்தில் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. அதாவது அவர் சமீபத்தில் நேர்முகத் தேர்வு ஒன்றில் கலந்து கொண்டாராம். அப்போது அந்த நேர்காணலில் பெரும்பகுதி தனது திறமைகளை மதிப்பிடுவதற்குப் பதிலாக.. நிறுவனத்தில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்வார் என்பதைப் பற்றியே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

விசுவாசம்
அவர் அந்த போஸ்ட்டில் மேலும், "அந்த நேர்காணல் அனுபவம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்காக நிறுவனம் அதிக முதலீடு செய்கிறது. இதனால் வெறும் சில ஆண்டுகள் மட்டும் வேலை செய்யும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதையே நேர்காணல் எடுப்பவர் என்னிடம் திரும்ப திரும்ப கூறினார்.
மேலும், புதிய ஊழியர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, அதிலிருந்து தாங்களாகவே முன்னேற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் என்னிடம் கூறினார். தேர்வின் இறுதியில் மீண்டும் என்னிடம் விசுவாசம் பற்றியே கேட்டார். அதாவது 'நீங்கள் அர்ப்பணிப்பும், விசுவாசமும் கொண்ட ஊழியர் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?' எனக் கேட்டார். எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
Gen Z தலைமுறை
எனக்கு இந்த நேர்காணல் புதிய அனுபவமாக இருந்தது. அதேநேரம் இந்த கம்பெனியில் நான் சேரலாமா வேண்டாமா.. இந்தக் கம்பெனி எப்படி இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையா அல்லது இன்றைய காலகட்டத்தில் இது சாதாரண விஷயமா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக Gen Z தலைமுறையினர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். அந்த தாக்கத்தால் இதுபோன்ற கேள்விகள் நார்மலாகிவிட்டதா?" என்று கேட்டிருந்தார்.
நெட்டிசன்கள்
அவரது போஸ்ட்டிற்கு பலரும் பல்வேறு பதில்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் இது ஒரு வார்னிங் என சொல்கிறார்கள். வேறு வழியே இல்லை.. கண்டிப்பாக இந்த வேலை வேண்டும் என்றால் மட்டுமே இந்த நிறுவனத்தில் சேரலாம் என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இப்படியொரு நிறுவனத்தில் வேலை செய்தால் மன உளைச்சல் ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், "இதன் உண்மையான அர்த்தத்தை நான் சொல்கிறேன். நீங்கள் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டும்.. அதற்காகக் கூடுதல் ஊதியமோ பதவி உயர்வோ கிடைக்காது. லீவ் எடுத்தாலும் ஆபீஸ் மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையே அவர்கள் சொல்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதுதான்டா பதில்
அதேநேரம் மற்றொரு தரப்பினர் இப்போது வேலைவாய்ப்பு சந்தை மிகவும் போட்டி நிறைந்ததாக மாறிவிட்டதாகவும் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர், "சார், இந்த நிறுவனத்திற்காக நான் விசுவாசமாக இருக்கிறேன். 100% அர்ப்பணிப்புடன் இருப்பேன். எந்த சூழ்நிலையிலும் வேலையை விட்டு போக மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள். முதலில் வேலை கிடைக்கட்டும். பின்னர் பிடிக்கவில்லை என்றால் 6 மாதங்களில் ராஜினாமா செய்துவிடலாம். யார் கேட்க போகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட கேள்விகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. இதுபோன்ற ஒரு ஆபீஸில் நீங்கள் வேலை செய்வீர்களா?














Click it and Unblock the Notifications