விஜய் மேஜையில் இருந்த முக்கிய புக்.. உள்ளே பார்த்ததும் அடுத்தடுத்து போடப்பட்ட சைன்.. தரமான முடிவு!
சென்னை: பெரம்பூர் தொகுதி தொடர்பாக முக்கியமான ரிப்போர்ட் ஒன்று முதல்வர் விஜய்க்கு சென்றுள்ளதாம். அந்த ரிப்போர்ட் அடிப்படையில் முக்கியமான பல திட்டங்களுக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்கி உள்ளாராம்.
நேற்று பெரம்பூருக்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது தொகுதிப் பயணத்தின் ஒரு பகுதியாக, சர்மா நகர் முதலாவது பிரதான சாலையில் புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்த அலுவலக வளாகத்திலேயே ஆறு கணினிகளுடன் கூடிய புதிய 'இ-சேவை மையம்' அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், பொதுமக்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுச் சேவைகளுக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். இந்த மையத்தின் தொடக்கமாக ஐந்து பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை முதல்வர் நேரில் வழங்கினார்.
ரூ.1,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வு
தொடர்ந்து, பெரம்பூர் தொகுதி மேம்பாட்டிற்காக வீட்டுவசதி, சுகாதாரம், குடிநீர் மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் விரிவான ஆய்வு நடத்தினார். இதற்கான புத்தகம் ஒன்றில் நேற்று விஜய் கையெழுத்து போட்டார்.
இதன் முதற்கட்டமாக, சென்னையின் முக்கியப் பகுதிகளான பெரம்பூர்-வியாசர்பாடி, அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டை ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள சுமார் 80 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை முழுமையாக மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அடியோடு மாறும் உட்கட்டமைப்பு
இம்முறை வெறும் சாலைகளை மட்டும் சீரமைக்காமல் அல்லது பூங்காக்களை மட்டும் தனியாக மேம்படுத்தாமல், ஒட்டுமொத்தப் பகுதியையும் ஒருசேர மாற்றியமைக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பின்வரும் முக்கிய மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.
சேதமடைந்த சாலைகள் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைக்கப்படும். முக்கிய சந்திப்புகள் விபத்து நடக்க முடியாத அளவிற்கு சர்வதேச நகரங்களில் உள்ளதை போன்ற பகுதிகளாக மாற்றப்படும்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க அதிநவீன மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்படும். அத்துடன் நகர்ப்புற மரங்கள் மற்றும் செடிகள் நடப்படும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளடக்கிய நடைபாதைகள் அமைக்கப்படும். பொது போக்குவரத்துடன் இந்த சாலைகள் இணைக்கப்படும்.
நவீன எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்தப்படும். மேலும் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித் தரும் விளம்பரப் பலகைகள் மற்றும் பிற நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
மின்னணு குடும்ப அட்டைகள்
இதன் தொடர்ச்சியாக, எம்.கே.பி நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடைக்குச் சென்ற முதல்வர், தமிழகம் முழுவதும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு இந்த அட்டைகளை வழங்கிய அவர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, ஒப்புதல் பெறப்பட்ட சுமார் 73,000 குடும்பங்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் வியாசர்பாடியில் ₹47.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மின்சார பேருந்து பணிமனையை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்குள்ள சார்ஜிங் உள்கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எதிர்காலத்தில் low floor மின்சார ஏசி பேருந்துகள் இந்த ரூட்டில் பய்னபடுத்தப்படும் என்று அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.
மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள ₹1,000 கோடி திட்டங்களில், அதிகப்பட்சமாக ₹544 கோடி பழுதடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி, முல்லை நகர் மற்றும் கொடுங்கையூரின் சில பகுதிகளில் பல ஆண்டுகளாக பழமையான குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளாகக் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மேம்படுத்தவும், பேருந்து நிலையங்கள், பொதுக் கழிப்பறைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட 11 பொதுப் பயன்பாட்டு வசதிகளை ₹160 கோடி செலவில் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் முதல்வர் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளதால், பணிகள் விரைந்து தொடங்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications