வீழ்ந்திருக்கிறோம், மீண்டும் எழுவோம்: கருணாநிதி
சென்னை:
போர்க்களத்தில் தற்காலிகமாகத்தான் வீழ்ந்திருக்கிறோம். மீண்டும் திமுக உத்வேகத்துடன் எழும் என்று முன்னாள்முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதியின் 78-வது பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமைஇரவு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
ஆட்சியை இழந்து விட்ட நேரத்தில் பிறந்த நாள் விழா தேவைதானா என்றேன். ஆனால் உடன்பிறப்புகள் வழக்கம்போல விழாவைக் கொண்டாட வேண்டும் என்றனர். ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வாழ்த்த வந்தவர்கள்இப்போதும் வருவார்களா என்ற ஐயம் கொண்டேன். ஆனால் ஆட்சி போனால் என்ன, உன் திருமுகத்தைக் காணதுடித்து நிற்கிறோம் என்று தொண்டர்கள் குழுமி நிற்கின்றனர்.
மதுரையைச் சேர்ந்த தனுஷ்கோடி அறிவாலய வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டார் என்ற துயரச் செய்திநெஞ்சுக்குள் நெருஞ்சியாய் தைத்துக் கொண்டிருக்கிறது. பிறந்த நாள் விழாவின்போது கழக வளர்ச்சி நிதியாக ரூ.2.20 லட்சம் வசூலாகியுள்ளது. அதிலிருந்து கணிசமான தொகை தனுஷ்கோடி குடும்பத்திற்கு வழங்கப்படும்.
இந்தப் போர்க்களத்தில் நாம் தற்காலிகமாகத்தான் விழுந்திருக்கிறோம். முழுமையாக விழுந்து விடவில்லை.எனவே மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன் போர்க்களத்தில் குதிப்போம். ஆட்சி 6 மாதத்தில் கவிழும், 1வருடத்தில் கவிழும் என்று காத்திருக்க வேண்டாம். தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட புண்ணை ஆற்றவே 5 ஆண்டுபிடிக்கும்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் கெட்டுக் கொண்டிருக்கிறது. நடுநிலையில் இருப்பவர்களே முதல்வர் பேசுவதுதான்சரி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். சிவசண்முகம் பிள்ளை, சாம்பசிவ மூர்த்தி, பண்பாளர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என பல சான்றோர்கள் சிறப்பாக நடத்திய சபை இது.
இன்னும் பத்து ஆண்டுகள் ஆட்சி புரிய தமிழக மக்கள் அனுமதித்திருந்தால் தமிழகம் மேலும் பயன்அடைந்திருக்கும். ஆனால் தமிழக மக்கள் தட்டி விட்டு விட்டார்கள். இந்தக் குறையைப் போக்க அவசரப்படாமல்,ஆத்திரப்படாமல் பொறுமையோடு அணுக வேண்டும் என்றார் கருணாநிதி.