ரெட்டைக் குட்டி போட்ட மலைப்பாம்பு
சென்னை:
சென்னை அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஒரு மலைப் பாம்பு ரெட்டைக் குட்டி போட்டுள்ளது.விலங்கியல் உலகில் இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சியாகும்.
சென்னைக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா. இங்குபலவிதமான விலங்குகளும் உள்ளன.
இந்தப் பூங்காவில் இருக்கும் பெண் மலைப்பாம்பு ஒன்று சில தினங்களுக்கு முன்பு 30 முட்டைகள் போட்டது. இதில்நான்கு முட்டைகள் பொரிந்து, குட்டி மலைப்பாம்புகள் வெளிவந்தன.
இதில் ஒரு முட்டையிலிருந்து மட்டும் இரண்டு குட்டி மலைப்பாம்புகள் வெளிவந்தன.
இதுகுறித்து விலங்கியல் பூங்கா அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விலங்கியல் பூங்காவில்இருக்கும் நிலாகி வகை மான்கள் இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளன. ஆனால் பாம்புகள் இதுவரை இரட்டைகுட்டிகளை ஈன்றது கிடையாது. ஒரே பாம்பு முட்டையில் இரண்டு குட்டிகள் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.
இதற்கு முன்னதாக ஒருமுறை மலைப்பாம்பு ஒன்று 117 முட்டைகள் போட்டது. இதுதான் இந்த விலங்கியல்பூங்காவில் ஒரே மலைப்பாம்பு போட்ட அதிக முட்டை எண்ணிக்கையாகும். இந்த விலங்கியல் பூங்காவில் 20பெரிய. மலைப்பாம்புகளும், 28 குட்டி மலைப்பாம்புகளும் உள்ளன. அவை அனைத்தும் நல்ல விதத்தில்பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பிறந்த இரட்டை பாம்புக் குட்டிகளும், மற்ற பாம்புக் குட்டிகளும் தாயிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் ராஜநாகம், மலைப்பாம்பு போன்றவை குட்டிப்பாம்புகளை தின்றுவிடும்.பாம்புக் குட்டிகளின் பாதுகாப்புக்காக அவற்றைத் தாய் பாம்பிடமிருந்து பிரித்து வைத்துள்ளோம்.
இந்தப் பாம்புக் குட்டிகள் 58 நாட்களுக்கு இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இந்த மலைப்பாம்புகள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
பொதுவாக யானைகள், சிங்கங்கள், புலிகள் போன்றவற்றிற்குத்தான் பெயர் வைப்போம். இப்போது இரட்டைக்குட்டியாக இருக்கும் இந்த பாம்புகளை அடையாளம் காண அடையாள குறியீடு கொடுப்போம் என்றார்.
யு.என்.ஐ.