மதுரை அருகே ஓடும் பஸ்ஸில் கொள்ளை
மதுரை:
மதுரை அருகே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் டிரைவரையும் ஒரு பயணியையும் கத்தியால் குத்தி,கொள்ளையடித்தவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லையில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் ஒன்று வந்துகொண்டு இருந்தது. கோவில்பட்டியை அந்த பஸ்அடைந்தபோது, 7 பேர் அதில் ஏறினார்கள்.
மதுரை ரிங் ரோட்டில், கருவேலம்பட்டி அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது, 7 பேரும் திடீரென எழுந்தனர்.அவர்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. ஒருவர் மட்டும் டிரைவரிடம் சென்று, கத்தியைக்காட்டி பஸ்ஸை நிறுத்துமாறு கூறினார்.
பஸ் நின்றதும், பயணிகளிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி பணம்-நகைகளைப் பிடுங்கினார்கள். பொருட்களைக்கொடுக்க மறுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவராமன் என்ற பயணிக்குக் கத்திக்குத்து விழுந்தது. இதைத் தடுக்கமுயன்ற டிரைவர் சுப்பிரமணியும் கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் அந்த ஆசாமிகள் பஸ்ஸில் இருந்து குதித்து ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும்வரவழைக்கப்பட்டது. காயமடைந்த 2 பேரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி, கொள்ளையடித்த 7 பேரையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications