வீரப்பன் விரைவில் சரணடைகிறார்?
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விரைவில் சரணடையவிருப்பதாக கர்நாடக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தான் சரணடைய வீரப்பன் ஒப்புக் கொண்டிருப்பதாகக்கூறப்படுகிறது. வீரப்பன் இன்னும் தமிழக எல்லைப் பகுதிகளில்தான் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றும்கர்நாடக உளவுத்துறை கூறுகிறது.
கடந்த மாதம் அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், வீரப்பனைப் பிடிப்பதைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள்தீவிரப்படுத்தப்படும் என்று ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, தன்னுடைய டெல்லிவிஜயத்தின் போதும், வீரப்பனைப் பிடிப்பதற்காக மத்திய அரசின் உதவியை நாடினார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.
மேலும், தமிழக, கர்நாடக சிறப்பு அதிரடிப்படைகளில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. அதிரடிப் படைகளின் 2மாநிலத் தலைவர்களும் மாற்றப்பட்டனர். கர்நாடக அதிரடிப்படைக்கு கெம்பையா தலைவராக நியமிக்கப்பட்டார்.தமிழக அதிரடிப்படைக்குத் தலைவராக முன்னாள் டிஜிபியான வால்டர் தேவாரம் மீசையை முறுக்கிக் கொண்டுமீண்டும் வந்துவிட்டார். இவருக்குத் துணையாக, அதிரடிப்படை ஐஜியாக முன்பிருந்த விஜயகுமாரேடெல்லியிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளார்.
வீரப்பனைப் பிடிப்பதற்கான புதிய பல திட்டங்களைத் தீட்டுவதற்காக, 2 மாநில அதிகாரிகளும் கடந்ததிங்கள்கிழமை சென்னையில் கூடினர். திட்டங்களையும் அவர்கள் தீட்டிவிட்டதாகத் தெரிகிறது.
அநேகமாக, இந்த மாதம் 21ஆம் தேதி வீரப்பனைத் தேடி கூட்டு அதிரடிப்படை காட்டுக்குள் காலடி எடுத்துவைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான எல்லாத் திட்டங்களும் தயார் என்றும் அதிகாரிகள் கூறிவருகின்றனர். காட்டுக்குள் செல்வதற்கு முன்னர் மீண்டும் அதிரடிப்படைகள் கூடி விவாதிக்கும் என்றும் வால்டர்தேவாரம் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், வீரப்பன் சரணடையப் போவதாகக் கர்நாடக உளவுத்துறை கூறியிருப்பது 2 மாநிலத்தலைவர்களையும், அதிகாரிகளையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
வீரப்பனைப் பிடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கவிருக்கும் அதே வேளையில்,வீரப்பனைப் பிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.