விபத்து நடந்த பாலத்தில் ஜூலை 11 முதல் மீண்டும் போக்குவரத்து
கோழிக்கோடு:
விபத்து நடந்த கடலுண்டி ஆற்றுப் பாலத்தில் ஜூலை 11ம் தேதி மீண்டும் ரயில்கள் ஓடத் துவங்கும் என்று ரயில்வே வட்டாரங்கள்கூறின.
கடலுண்டி ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் பாதியளவே நிறைவு பெற்றுள்ளன. எனவே, உடைந்துபோன பழைய பாலத்தைச் சரி செய்தால்தான், மீண்டும் ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியும்.
இதனால், உடைந்த பாலத்தின் உத்திரங்களை மாற்றும் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன. பழைய மர உத்திரங்களுக்குப் பதில்,புதிய இரும்பு உத்திரங்கள் இப்பாலத்தில் பொருத்தப்படும்.
ஜூலை 11க்குள் இப்பணிகள் முடிவடைந்து, மீண்டும் இப்பாலத்தில் ரயில் போக்குவரத்து ஆரம்பமாகும்.
ரயில் பெட்டிகள் கவிழ்ந்து ஏற்பட்ட இந்த விபத்தில், இதுவரை 48 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகளில் வேறு சடலம்எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், ஆற்றில் விழுந்த 6 பெட்டிகளில், 2 பெட்டிகள் கிரேன்கள் மூலம் வெளியே எடுக்கப்பட்டு விட்டன. மீதிப் பெட்டிகளும்விரைவில் எடுக்கப்படும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.