மாஜி மந்திரி பொன்முடி ஜாமீனில் விடுதலை
சென்னை:
அரசு உணவுக் கிடங்கில் அத்துமீறி நுழைந்தாகக் கைது செய்யப்பட்ட திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள்போக்குவரத்துத் துறை அமைச்சருமான பொன்முடி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
இவர் விழுப்புரத்தில் உள்ள தமிழக அரசின் உணவுக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புகுந்தார். தன்னுடன்நிருபர்களையும் அழைத்துச் சென்றார்.
திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது புழுத்த அரிசி என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை பொய்யாக்குவதற்காக அவர் அரிசிக்கிடங்கில் நுழைந்தார்.
ஆனால், அவரை நள்ளிரவிலேயே போலீசார் கைது செய்தனர். அவருடன் சென்ற 6 திமுகவினரும் கைது செய்யப்பட்டனர். இதைஎதிர்த்து போராட்டம் நடத்திய திமுக எம்.பி உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
பொன்முடியுடன் உணவுக் கிடங்கில் நுழைந்த சன் டிவி நிருபரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்துப்போராட்டம் நடத்திய 150 பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட சன் டிவி நிருபரும் 150 பிற பத்திரிக்கையாளர்களும் வெள்ளிக்கிழமை மாலைவிடுவிக்கப்பட்டனர்.
பொன்முடியும் வெள்ளிக்கிழமை மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.