"என்னால முடியல.." அமீரகத்தில் கதறி அழும் இந்தியர்கள்.. இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?
துபாய்: அமீரகத்தில் இப்போது கோடை விடுமுறை ஆரம்பிக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், தூதரகங்களில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத காலதாமதம் காரணமாகப் பலரது பயணத் திட்டங்கள் பாதிக்கப்படுவதாக அங்கிருப்போர் வேதனை தெரிவிக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்
அமீரகத்தில் இப்போது சம்மர் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் சம்மரை சமாளிக்க இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு ட்ரிப் செல்வார்கள். இந்தச் சூழலில் தான் பயணத்திற்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில் அவர்களில் பலர் புதுவித சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அதாவது பாஸ்போர்ட் விரைவில் காலாவதியாக இருப்போர், புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அப்பாயின்மென்ட்
ஏனென்றால் சமீபத்தில் தான் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் என இரண்டுமே பாஸ்போர்ட் உள்ளிட்ட தூதரக சேவைகளை முழுமையாக "Appointment Only" முறைக்கு மாற்றியுள்ளன. அதாவது இதற்கு முன்பு தூதரக சேவைகளைப் பெற முன்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்க தேவையில்லை. நேரடியாகத் தூதரகம் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்ற முறை இருந்தது. அதை மாற்றி இப்போது ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த அப்பாயின்மென்ட் கிடைக்காமல் தான் பலரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
சிக்கல்
இது தொடர்பாகத் துபாயில் வசிக்கும் நேஹா பகவத் என்ற இந்தியர் கூறுகையில், "நாங்கள் விடுமுறைக்குத் தாய்லாந்து போகலாம் என இருந்தோம். பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் கேட்பார்கள். எனது மகனின் பாஸ்போர்ட் வெறும் 3 நாட்கள் குறைவான வேலிடிட்டி கொண்டு இருக்கிறது. இதைக் கடைசி நேரத்தில் நேரத்தில் தான் தெரிந்து கவனித்தோம். ஜூலை 18ஆம் தேதி நாங்கள் திட்டமிட்டு, ஏற்கனவே விமான டிக்கெட்டுகள் புக் செய்து எல்லாம் ரெடி செய்துவிட்டோம்.
ஆனால் இப்போது அப்பாயின்மென்ட் வாங்க முடியவில்லை. பாஸ்போர்ட் முன்பதிவு இணையதளம் தொடர்ந்து முடங்கியுள்ளது. பலமுறை முயன்றும் அப்பாயின்மென்ட் பெற முடியவில்லை. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தோம். பல நாட்கள் முயன்ற பிறகு ஒருவழியாக இறுதியில் நேர்முக சந்திப்புக்கு அப்பாயின்மென்ட் கிடைத்தது. பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு தான் நிம்மதி கிடைத்தது. பாஸ்போர்ட் வேலைகளை செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. தூதரக வளாகத்தில் நின்றபடியே அழுதுவிட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முடியல
இதேபோல் ஹசிப் கான் என்ற மற்றொரு இந்தியர், பலமுறை முயன்றும் அவருக்கு மெயில் வெரிபிகேஷன் செய்ய முடியவில்லையாம். இதனால் அப்பாயின்மென்ட் புக் செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார். அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும் சூழலில், என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகிறார்.
இந்தியாவை சேர்ந்த மற்றொரு நபர், ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தனது மகளின் பாஸ்போர்ட் காலாவதியாக இருப்பதை சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளார்.. அனைத்து டாக்குமெண்டுகளும் சமர்ப்பித்த பிறகும், புதிய பாஸ்போர்ட் கிடைக்க மூன்று வாரங்கள் வரை ஆகலாம் என தகவல் கிடைத்ததால் அவருக்கும் தங்கள் ட்ரிப் என்ன ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தூதரகம் விளக்கம்
கோடை விடுமுறை காலத்தில் திடீரென விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அப்பாயின்மென்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாய் துணைத் தூதரகத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 1000+ பேர் வருவதாகவும் அதை சமாளிக்கவே அப்பாயின்மென்ட் முறை கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சேவைகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நேர்காணல் புக் செய்ய எந்தவொரு கட்டணமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பாயின்மென்ட் வாங்கி தருவதாக சொல்லி பணம் பறிக்கும் ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications