பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு உத்தரவு
சென்னை:
இந்த ஆண்டு தமிழகத்தில் 225 பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், 1,500 ஆசிரியர்களை புதிதாக நியமிக்கவும் தமிழக அரசுமுடிவெடுத்துள்ளது.
இது குறித்து தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கிராமப்புற ஏழை மாணவர்கள் ஆரம்பக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிடாமல், தொடர்ந்து எந்த வித தடையுமின்றி உயர் கல்விபெறவும், சுய வேலை வாய்ப்பு பெறுவதற்காக அரசு உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த அரசு முடிவுசெய்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு 100 அரசு நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாகவும், 125 அரசு உயர்நிலைப்பள்ளிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளாவும் உயர்த்தக் கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கிராமப்புறங்களில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதனால் தமிழகத்தில் 200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தமிழ் ஆசிரியர்பணியிடங்களும், 100 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 100 அலுவலக உதவியாளர் பணியிடங்களும், 875 முதுகலைஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்படுகிறது.
இது தவிர 125 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமும் புதிதாக உருவாக்கப்படுகிறது.
புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ 16 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.