கருணாநிதி கைது: போலீஸ் கேசட் தியேட்டர்களில் ஒளிபரப்பு - கோர்ட்டு நோட்டீஸ்
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தரப்பில் எடுத்ததாகக் கூறப்படும் கேசட்டை, தமிழ்நாடுமுழுவதும் ஒளிபரப்புவது குறித்த ஒரு வழக்கில், 10 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மாநில உள்துறைச்செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் 30ம் தேதி கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தை வீடியோ கேசட்டில் பதிவு செய்த சன் டி.வி.அன்று முழுவதும் அக்காட்சிகளை ஒளிபரப்பி, இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கியது.
இச்சம்பவம் நடந்து 40 மணி நேரம் கழித்து, தாமும் ஒரு வீடியோ கேசட் எடுத்திருப்பதாகக் கூறி, தமிழகப்போலீசார் மற்றொரு கேசட்டை வெளியிட்டனர்.
இந்த 2 கேசட்டுகளுமே முன்னுக்குப் பின் முரணாக இருக்கவே, பிரச்சனை விசுவரூபம் எடுத்தது. முழுக்க முழுக்கஅனிமேஷன் மூலம் போலீசாரை மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தாக்கியது போன்ற காட்சிசேர்க்கப்பட்டுள்ளது என்று தடயவியல் துறை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், இது பற்றி எல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, போலீஸ் எடுத்த வீடியோ கேசட்டைத் தமிழகம்முழுவதும் உள்ள கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தது. அரசின் எந்தவித வற்புறுத்தலுக்கும்ஆளாகாமல், கேபிள் டி.விக்காரர்களும் இந்தக் கேசட்டைத் தற்போது ஒளிபரப்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் கூட, போலீசார் எடுத்த வீடியோ கேசட்டைக் காட்டுவதற்குதமிழக செய்தித் துறை திட்டமிட்டது. இது தொடர்பான உத்தரவும் சமீபத்தில் வெளியானது.
ஆனால் இந்த உத்தரவுக்குத் தடை வேண்டும் என்று சமூக சீர்திருத்த வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் மீது திங்கள்கிழமை காலை விசாரணைசென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
தமிழக உள்துறைச் செயலாளர், செய்தி ஒளிபரப்புத் துறை செயலாளர் மற்றும் செய்தித்துறை இயக்குநர் ஆகியோர்,இந்த மனு தொடர்பாக 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதி என்.கே. ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.