கரும்புலிகளின் உடல்களை ஒப்படைக்க இலங்கை தயார்
கொழும்பு:
கொழும்பு விமானப் படைத் தள தாக்குதலில் இறந்தபுலிகளின் உடலை ஒப்படைக்க செஞ்சிலுவை சங்கம்விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டு பேசிவருகிறது.
அப்போது மொத்தம் 14 புலிகள் இறந்தனர். இவர்களில் சிலர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். சிலர் தாங்களாகவே வெடிகுண்டுகளை இயக்கி உடல்களைத் தகர்த்துக் கொண்டனர்.
அவ்வாறு இறந்த 14 புலிகளின் உடலை புலிகளிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது.
இதற்காக செஞ்சிலுவை சங்கத்தினரை இலங்கை அரசின் காவல்துறையினர் அணுகியுள்ளனர். இது குறித்துஅச்சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ் குனவர்தனே கூறியதாவது,
தாக்குதலில் இறந்த புலிகளின் உடலை புலிகளிடம் ஒப்படைக்க இலங்கை அரசு எங்களைத் தொடர்பு கொண்டது.நாங்கள் இதுகுறித்து புலிகளிடம் பேச்சு நடத்தி வருகிறோம்.
இதற்கு புலிகள் தரப்பும், இலங்கை அரசும் சம்மதித்து விட்டால், கொழும்பு பகுதியில் நடந்த தாக்குதலில் இறந்தபுலிகளின் உடலை ராணுவம் ஒப்படைப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.
இதற்கு முன்பு, வடக்குப் பகுதியில்தான் இதுமாதிரி இறந்த உடல்களை 2 தரப்பினருக்கும் ஒப்படைத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புலிகள் மீதான தடை தொடரும்:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்த வசதியாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமான நிலையம் மீதான தாக்குதலையடுத்து தடையை நீக்க வாய்ப்பேயில்லை என இலங்கைஅறிவித்துள்ளது.
இலங்கை தவிர இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.