பெரம்பலூரை மேம்படுத்த புதிய திட்டங்கள்
பெரம்பலூர்:
பெரம்பலூரை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பெரம்பலூரில்ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகமும் கட்டப்பட உள்ளது என்று தமிழக சட்டசபையின் துணைசபாநாயகர் ஏ. அருணாசலம் கூறியுள்ளார்.
இவர் சனிக்கிழமை பெரம்பலூருக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது:
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
தமிழக முதல்வர் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வார் என்று நம்புகிறேன்.
வரகூர் தாலுகாவிற்கான அரசு மருத்துவமனையை குன்னம் பகுதியில் கட்டும் திட்டமும் உள்ளது. பின்தங்கிஇருக்கும் பெரம்பலூரை மேம்படுத்தும் விதமாக இங்கு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டமும் உள்ளது.
தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பருத்தி ஆய்வகம் ஒன்றை பெரம்பலூரில் நிறுவுவதற்கானமுயற்சியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அருணாசலம்.