திமுக, அதிமுக வாதம் - சட்டமன்றத்தில் கடும் அமளி
சென்னை:
பாலங்கள் கட்டப்பட்டது தொடர்பாக, சட்டசபையில் வழக்கம் போல் திமுக உறுப்பினர்களுக்கும்,அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன், திமுக ஆட்சியின் சாதனைகளை ஒப்பிட்டுப் பேசினார்.அப்போது திமுகவினர் அவரை உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்தார்கள். இதற்கிடையில் அதிமுக அமைச்சர்களும்,உறுப்பினர்களும் குறிக்கிட்டுப் பேசியதால் சபையில் வெகுநேரம் அமளி ஏற்பட்டது.
சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:
நான் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவன் தான். அந்த அடிப்படையில்தற்போதைய அரசு ஏதாவது புதிய திட்டங்களை அறிவித்துள்ளதா என்று தேடிப் பார்த்தேன்.
அப்படி ஏதும் இல்லை. எல்லாம் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் தான். ஏரி, ஆறு மற்றும் குளங்கள் தூர்வாருதல் போன்ற திட்டங்கள் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.
மேலும் கடந்த திமுக ஆட்சியில் 10 மாவட்டக் கலெக்டர் அலுவலகங்கள் கட்டப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஒன்றுகூட கட்டப்படவில்லை. மேலும் 200க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டத் திட்டமிட்டு, அவற்றில் ஏராளமானபாலங்கள் கட்டப்பட்டன என்றார்.
அப்போது பொதுப் பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் குறிக்கிட்டு, "ஏரிகள் தூர்வாருதல் போன்றதிட்டங்கள் எல்லாம் கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவால் 1995ம் ஆண்டே தொடங்கப் பட்டதுதான். உலக வங்கியில் நிதியுதவி பெற்று ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள்தான் அவை" என்றார்.
உடனே எதிர்கட்சித் தலைவர் அன்பழகன் எழுந்து, "உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறும் போது வெறும்தொகையை மட்டும் ஓப்பீடு செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் 10 பாலங்கள் கட்டப்பட்டன என்றால், திமுகஆட்சியில் 20 பாலங்கள் கட்டப்பட்டன என்று சுட்டிக் காட்டுகிறார். இதை இந்த அவை பாராட்ட வேண்டுமே தவிரவீண் வாதம் செய்யக் கூடாது" என்றார்.
பிறகு நிதி அமைச்சர் பொன்னையன், "கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஏராளமாகக் கடன் வாங்கிவீண் செலவு செய்ததால், அரசுக்கு கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. அதைத் தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்" என்றார்.
அப்போது சென்னை மேயர் ஸ்டாலின் குறிக்கிட்டு, "நிதி அமைச்சர் எதை வீண் செலவு என்று தெளிவாகக் கூறினால்நாங்கள் தகுந்த விளக்கம் அளிப்போம்" என்றார்.
"அடையாறில் பஸ் கூடச் செல்ல முடியாத அளவுக்கு தேவையில்லாமல் பாலம் கட்டியது, அண்ணா பல்கலைக்கழகம் அருகே இருந்த அகலமான சாலையை, பாலம் கட்டி குறுகலாக்கி போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படவழிசெய்தது. இப்படிப் பல செலவுகள் வீண்"என்று பொன்னையன் கூறினார்.
அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், "பாலங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, மாமன்றத்தின் ஒப்புதலோடு தான்கட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஒரு வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கின் முடிவில்உண்மைகள் வெளிவரும்" என்றார்.
அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் எழுந்து, "நீங்கள் இப்படிப் பேசினால், நேரு ஸ்டேடியத்தை டெண்டர்விடாமலேயே கட்டியதைப் பற்றி நாங்கள் பேச வேண்டி வரும்" என்றார்.
இதற்கு அதிமுக தரப்பில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து ராமச்சந்திரன்பேசிக்கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் தம்பித்துரையும், அதிமுகவின் எம்.எல்.ஏவான இன்பத்தமிழனும்ராமச்சந்திரனை நோக்கி எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இதற்கு ராமச்சந்திரன் இன்பத்தமிழனிடம், "இதை உன் அப்பாவிடம்(தாமரைக்கனியிடம்) போய் கேள்" என்றார்.அப்போது சபாநாயகர் காளிமுத்து, "சபையில் பேசுபவர்கள் அமர்ந்து கொண்டு பேசக் கூடாது. உறுப்பினர்இன்பத்தமிழனின் அப்பா இப்போது உங்களுக்கு வேண்டியவர் தான்" என்றார்.
பிறகு மீண்டும் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய போது, அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.இதனால் சபையில்ஏற்பட்ட கூச்சல் குழப்பம் அடங்க வெகு நேரமானது.