ஜெயலலிதாவை ஆளுநர் முதல்வராக்கியது சரியே- உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
டெல்லி:
முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று ஆளுநருக்கு வழிகாட்ட எந்தவிதமான திட்டவட்டமான நெறிமுறைகளும்இல்லை என முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.
நீதிபதிகள் பரூச்சா, பட்நாயக், சபர்வால், ருமா பால், பிரஜேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சட்டபெஞ்சின் முன் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நீதிபதிகள் முன் வாதாடிய வேணுகோபால் கூறுகையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில்யாரை வேண்டுமானாலும் முதல்வராக நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. இந்த விஷயத்தில் ஆளுநருக்குவழிகாட்ட அரசியல் சட்டத்தில் எந்த விதிமுறையும் இல்லை. அரசியல் சட்டம் இவ் விஷயத்தில் முழு அமைதிகாக்கிறது.
எம்.பியாகவோ அல்லது எம்.எல்.ஏவாகவோ இல்லாத ஒருவரை பிரதமராகவோ அல்லது முதல்வராகவோநியமிக்கும்போது அரசியல் சட்டத்தின் 173வது பிரிவும், 164 (4)வது பிரிவும் செல்லாது. (ஊழல் வழக்கில்தண்டனை பெற்றவர்கள் உயர் பதவிகளுக்கு பதவியேற்க தடை செய்யும் அரசியல் சட்டப் பிரிவுகள் இவை)
பிரதமர் அல்லது முதல்வர் பதவிக்கு நியமிக்கப்படுபவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் (எம்.எல்.ஏ.அல்லது எம்.பி.) இல்லாதபட்சத்தில் இந்த அரசியல் சட்ட பிரிவுகள் பொருந்தாது. இதற்கு உதாரணமாக தேவெகெளட பிரதமராகப் பொறுப்பேற்றதை சொல்லலாம்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கத்தான் அரசியல் சட்டத்தில்வழிவகை உள்ளது. ஆனால், அவர்களை பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் 6 மாதத்துக்கு அமர்த்துவதைத் தடைசெய்ய எந்த வழியும் இல்லை.
இவ்வாறு வேணுகோபால் வாதாடினார்.
அப்போது பேசிய நீதிபதி பரூச்சா, அப்படியானால் 25 வயது கூட ஆகாத ஒருவரைக் கூட, அவர் இந்தியராகவேகூட இல்லாதபட்சத்திலும் ஆளுநர் நினைத்தால் முதல்வராக நியமித்து விட முடியும் என்கிறீர்களா? என்று கேட்டார்.
வாதம் தொடர்ந்து நடக்கும்.
இந்நிலையில், டான்சி வழக்கில் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்களை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றநீதிபதியை மாற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்குஎதிராக வாதாடி வரும் அரசுத் தரப்பு வழக்கறிஞரான வெங்கடபதி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதியைஉச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
வழக்கில் தனக்கு போதிய ஆவணங்களையும் வாதாட போதிய நேரத்தையும் தர நீதிபதி பாலசுப்பிரமணியம்மறுப்பதாகவும், இதனால் இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் வெங்கடபதிகோரியிருந்தார்.
ஆனால், நீதிமன்றத்தை மாற்ற வேண்டியதில்லை, நீதிபதியை மட்டும் மாற்றலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.மேலும் அக்டோபர் 1ம் தேதிக்குப் பின்னர் தான் இந்த வழக்கு விசாரணையை புதிய நீதிபதி தொடங்கலாம் எனவும்உத்தரவிட்டுவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுபாஷன் ரெட்டி புதன்கிழமை (நாளை)பதவியேற்கிறார். அவர் தான் ஜெயலலிதாவின் வழக்குக்கு புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும்.