தின்று தீர்த்தது தீவிரவாதம் - ககருணாநிதி கண்டன கவிதை
சென்னை:
அமெரிக்காவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி உருக்கமான கவிதையைஎழுதியுள்ளார்.
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா?
நீரை நீரால் நிறுத்த முடியுமா?
வெறுப்பை வெறுப்பால் விலக்க முடியுமா?
வெம்மையை வெம்மையால் மாற்ற முடியுமா?
தீமைகள் எனக் கருதும் செயல்கள் அகற்றிட
தீவிரவாதமெனும் மற்றொரு தீமை பயன்படுமா?
உலகத்தின் வல்லரசாய்த் திகழ்கின்ற
ஓங்கு புகழ் அமெரிக்க திருநாட்டின்
உயர்த்தனிப் பெருமைதனை ஓர் நொடிக்குள்
உடைத்தெறிந்த நிகழ்ச்சியினால் அதிர்ச்சியுற்றேன்.
அழகிய மகளிர் அள்ளி முடித்து ஆகாயம் தொட
அடுக்கி வைத்த கொண்டைகள் போல்
அமெரிக்க பொறியாளர்கள் அமைத்திட்ட கட்டிடங்கள்
அனைத்துலக வர்த்தக சபையின் வானுயர மாளிகைகள்
வசீகரப் பொலிவுமிகு வாஷிங்டன் தலைநகரம்
வரும் பகையை விரட்டுகின்ற வலிமைசேர் நியூயார்க்
வான்படைக்கான விமானங்கள் குவிந்திருக்கும்
பெண்டகன் எனப்படும் பெரியதோர் ராணுவ முகாம்
இங்கெல்லாம் புகை நுழைந்தது போல பகை நுழைந்து
எங்கெல்லாம் இன்னும் நுழைந்தது எனத் தெரியாவண்ணம்
ஆயிரம் பேர் பத்தாயிரம் பேர் இல்லை இல்லை
ஐம்பதாயிரம் பேருக்கு மேலேயென்று தின்று முடித்தது தீவிரவாதம்!
பொருந்தாக் கொள்கையினால் சில பேரால்
பொல்லாங்கு விளைந்ததென்றும்
திருந்தார் அவர் என்ற திடமான முடிவினாலே
தீர்த்துக் கட்டினோம் எனத் தீவிரவாதம் கூறுமானால்
அதைக் கூட ஏற்றுக் கொள்ள அண்ணல் காந்தி வழி
அப்போதும் இப்போதும் எப்போதும் தயாராய் இல்லை.
பச்சை ரத்தம் ஆறாக ஓடுவதற்கும்
பல்லாயிரவர் பிணங்களாய் வீழ்வதற்கும்
இச்சை கொண்ட பிள்ளைகளை இளங்கிள்ளைகளை
இளமகளிர் இழந்து தவிப்பதற்கும்
பணிபுரியச் சென்றோர் ஆயிரம் ஆயிரமாய்
பிணி ஏதுமின்றிச் சவங்களாய்ச் சரிவதற்கும்
அணிமணி பூண்டு ஆடவர் மகளிர்
அலுவலகம் சென்று திரும்புவர் என்று
காதலியர், மனைவியர்,காளையர்க்காகவும்
கணவர்க்காகவும் காத்திருந்து காத்திருந்து
கனிமுத்த மழை பொழிந்த காலமெல்லாம்
கண்ணாடிப் பாத்திரம், கல்பட்டு நொறுங்கியதென
கருணை, அன்பு, காதல், பாசமெல்லாம் கடல் அரிப்பென
கயவர் விளைத்த செயலால் கதை முடித்ததற்கும்
பாராட்டுப் பெறத் தகுதியுண்டோ தீவிரவாதத்திற்கு?
பதிலுக்குப் பதில் அந்த தீவிரவாதத்தைப்
பழி வாங்குவோம் என்று பட்டாக்கத்தி தீட்டுவதால்
பலன்தான் ஏதுண்டோ?
பத்து மடங்கு மானுடர் அந்தப் போரில்
செத்து மடிவதல்லால் இந்த ஜெகத்துக்கு என்ன நன்மை?
தீவிரவாதச் செயல்களாலே
தித்திக்கும் ஒரு புத்துலகைக்
காண்போமென்று கனவு கண்டு
களம் அமைப்போர்க்கெல்லாம்
கனிவுடனே சொல்லிக் கொள்வேன்
உங்கள் புத்துலகில்;
தித்திப்பு இருக்கும்
எத்திக்கும் மனிதன் இருக்க மாட்டான்!












Click it and Unblock the Notifications