பாகிஸ்தான் கலவரத்தில் 4 பேர் பலி
குவேட்டா:
குவேட்டாவில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர்.
குவேட்டாவில் நேற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில்இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் ஆப்கானிஸ்தான் அகதிகள் பெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தானின் மதவாத அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டங்கள் ராவல்பிண்டி, இஸ்லாமாபாத்திலும் நடந்து வருகின்றன.
3 முக்கிய மதத் தலைவர்கள் உள்பட நாடு முழுவதும் 200 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
பலுசிஸ்தானில் தங்கள் சொந்த நாட்டையே எதிர்த்து பாகிஸ்தானியர்கள் கோஷம் போட்டனர். முதலில் பாகிஸ்தானை அழித்துவிட்டுஆப்கானிஸ்தானை அழிக்க வேண்டும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். இவர்களை போலீசார் தாக்கினர்.
இங்கு ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர் சகீர் ஷாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இதையும் மீறிஆயிரக்கணக்கான அகதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.