திடந்தோள் தோழனே, எழுந்து வா... நடிகர் சரத் அறைகூவல்
சென்னை:
திடந்தோள் படைத்த திமுக தோழனே, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கனியை கருணாநிதியின் கையில் பறித்துக்கொடுக்க எழுந்து வா என்று நடிகரும், திமுக எம்.பியுமான சரத்குமார் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்குகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.தகுதியான ஒருவருக்கே வாக்காளர்களின் வாக்குகள் போய்ச் சேர வேண்டும்.
தமிழகமெங்கும் மக்கள் நலப் பணிகளை சீரிய முறையில் செயல்படுத்தியது திமுக அரசு என்பதை மக்கள் யாரும்மறக்கவில்லை. சென்னை மாநகரை சிங்காரச் சென்னையாக்க மாநகர மேயர் ஸ்டாலின் மேற்கொண்டமுயற்சிகளை சென்னை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர் அஸ்திவாரமிட்ட பணிகள் தொடர்ந்துசெயல்படுத்தப்பட திமுக கூட்டணிக்கு மக்கள் பேராதரவை வழங்க வேண்டும்.
கழக சேனையின் திடந்தோள் படைத்த தோழனே, நீ ஒரு வீரிய அம்பு. உன்னால்தான் வெற்றிக் கனியை எய்துகருணாநிதியின் கைகளில் கொடுக்க முடியும். எனவே நீ எழுந்து வா, வெற்றிக் கனியை பறித்துத் தா.
ஒரு வாக்குத்தானே என்று உதாசீனமாக இருந்து விடக் கூடாது. ஒரு வாக்கினால் மத்தியில் ஆட்சியைக்கலைத்தவர்களை எதிர்த்து நாம் களத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜாதி மத இனமொழி பேதமற்ற புதிய சமுதாயத்தை படைக்க புறப்படுவோம் என்று கூறியுள்ளார் அவர்.