பணியில் சேர்ந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் சஸ்பெண்ட்
சென்னை:
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று, கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் பொறுப்பேற்ற 2 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், சமீபத்திய ஒரு உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, மீண்டும சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான எச்.எம்.பாண்டே மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பாண்டேவுக்கு கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் ஒரு ஆண்டும், கலர் டி.வி. ஊழல் வழக்கில் 5 ஆண்டுகளும்தண்டனை விதிக்கப்பட்டது. சத்தியமூர்த்திக்கு கலர் டி.வி. ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது.
ஆனால் இவர்களுடைய மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இவர்கள் 2பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை நீக்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் 2 நாட்களுக்கு முன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புள்ளி விவரமைய ஆணையாளராக பாண்டேவும், சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநராக சத்தியமூர்த்தியும் தங்கள்பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
அது அரசியல் கட்சிகளிடையே பெரும் புயலைக் கிளப்பியது. ஊழல் குற்றங்களில் தண்டனை சுமத்தப்பட்டவர்கள்பதவி, அதிகாரத்தில் இருந்தால் அது நல்ல மனம் படைத்த அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றுஉச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை மீறி 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும்பதவியில் அமர்த்தியது சரியல்ல என்ற கருத்து எழுந்தது.
இதையடுத்து, இரு அதிகாரிகளும் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநிலத் தலைமைச்செயலாளர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர்கள் மீதான வழக்குகள் முடியும் வரை சென்னையிலிருந்து வேறு எங்கும் செல்லக் கூடாது என்று இந்தஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.