திருச்செந்தூர் விபத்து - சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பக்தர்களை ஏற்றி வந்த மினி லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ளது குலசேகரன் பட்டினம். இங்கு முத்தாளம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 10நாட்களாக நவராத்திரி விழா நடந்து வந்தது. விழாவின் இறுதி கட்டமான ஆயுத பூஜை மற்றும் அம்மனுக்குப் பூஜை மற்றும் சூரசம்ஹாரம் ஆகியவை சனிக்கிழமை நடந்தன.
சூரசம்ஹாரத்தைப் பார்க்க பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். ராதாபுரம் அருகேயுள்ள வானியம்குளம்கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் முருகனும் ஒருவர். முருகன் தனது குடும்பத்தினருடன் சூர சம்ஹாரத்தைக் காணவந்திருந்தார்.
அவரது உறவினர்கள் சிலரும் சேர்ந்து மினி லாரியில் குலசேகரன் பட்டினத்திற்கு சென்றனர்.
சூர சம்ஹாரத்தைப் பார்த்து விட்டு சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மேல் அனைவரும் மீண்டும் தங்களது கிராமத்திற்குத்திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள தோப்பூர் என்ற இடத்தில் மினி லாரி போய்க் கொண்டிருந்தபோது, எதிரேஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அதனுள்ளே ஆட்கள் இருந்தார்கள்.
எதிர்பாராத விதமாக வேனும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் இரு வாகனங்களும் தாறுமாறாகநொறுங்கின. சம்பவ இடத்திலேயே 8 பேர் இறந்தனர். 32 பேர் காயமடைந்தனர். அனைவரும் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் போகும் வழியில் மேலும் 2 பேர் இறந்து விட்டனர்.
சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துசென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.