காங்கிரசில் சேருவது பற்றி வாழப்பாடி நாளை முடிவு
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் திரும்பவும் சேருவது குறித்த எனது முடிவை நாளை (புதன்கிழமை) அறிவிப்பேன் என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
நீண்ட நாட்களாகவே வாழப்பாடி மீண்டும் காங்கிரசில் சேரப் போகிறாரா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வந்தது.இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் மாறி, மாறி நிலவி வந்தன.
சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று சோனியா காந்தியையும் சந்தித்து விட்டு வந்தார் வாழப்பாடி.
அவர் காங்கிரசில் சேருவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகத்தெரிகிறது. இதனால் காங்கிரசில் சேரும் திட்டத்தை வாழப்பாடி தள்ளிப் போட்டார்.
இதற்கிடையே இரு நாட்களுக்கு முன் திடீரென்று வாழப்பாடி வீட்டுக்குச் சென்ற இளங்கோவன், அவரைக்காங்கிரசில் சேருமாறு கேட்டுக் கொண்டார். இருவரும் அப்போது மனம் திறந்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக ராஜீவ் காங்கிரசின் அரசியல் விவகாரக் குழுவை நேற்று கூட்டிய வாழப்பாடி, காங்கிரசில்மீண்டும் ஐக்கியமாவது குறித்து உறுப்பினர்களுடன் விவாதித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்பது உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரசில் இணைவதற்குச் சம்மதம்தெரிவித்தனர். நாளை மாவட்ட நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசவுள்ளார் வாழப்பாடி.
அவர்களுடன் பேசிய பிறகு, காங்கிரசில் சேருவதா இல்லையா என்பது பற்றிய முடிவை நாளை மாலை வாழப்பாடிராமமூர்த்தி அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.