தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ்- வேன் மோதல்: 6 பேர் பலி
ஈரோடு:
காங்கேயம் அருகே அரசுப் பேருந்தும் திருமணக் கோஷ்டியினர் சென்ற வேனும் நேருக்கு நேர்மோதிக்கொண்டதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியானார்கள்.
அரசுப் பேருந்தை ஓட்டியவர் தற்காலிக டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போதியஅனுபவம் இல்லாத தற்காலிக டிரைவர்களை வைத்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிய அரசுப் பேருந்து தீபாவளியன்று கோவில்பட்டி அருகே எதிரே வந்தவேனுடன் மோதியதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதேபோல தமிழகத்தில் பலபகுதிகளிலும் இந்தத் தற்காலிக டிரைவர்களால் பெரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பழநியில் இருந்து சேலத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து(டி.என்.-33 என்-1389), ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வட்டமலைப்பாளையம் என்ற இடத்தில்எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட 6 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். மேலும்13 பேர் பலத்த காயத்துடன் காங்கேயம் அரசு மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேனில் வந்த அனைவரும் சேலம் அம்மாப் பேட்டையிலிருந்து பழநியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில்கலந்துகொள்ள வந்தவர்கள்.
இவர்களில் வேனில் இருந்த விஸ்வநாதன், பலராம் செட்டியார், அவரது மனைவி மனோன்மணி, லட்சுமி, வேன்டிரைவர் குமார், மற்றும் குழந்தை கவுசிக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்து நடந்த இடம் ஒரு வளைவான பகுதியாகும். அந்த இடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர்ஒன்றை முந்த முயன்றபோது எதிரே வந்த பஸ் மீது வேன் மோதியுள்ளது. இதில் தவறு வேன் டிரைவர் மீதா அல்லதுபேருந்தை ஓட்டிவந்த தற்காலிக டிரைவர் மீதா என்று தெரியவில்லை.
இதுகுறித்துத் தாராபுரம் டி.எஸ்.பி. குப்புசாமி, மற்றும் ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்புநடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.