சிறுமுகை காட்டில் வீரப்பனைத் தேடும்பணி தீவிரம்
சிறுமுகை:
நெற்றிக்கண் ஆசிரியர் மணிக்கு வீரப்பன் கேசட் கொடுத்தனுப்பியுள்ள நிலையில் சிறுமுகை காட்டுப் பகுதியில்அவனைத் தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
நெற்றிக்கண் வாரஇதழ் ஆசிரியர் மணிக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த சனிக்கிழமை ஒரு ஆடியோ கேசட்கொடுத்து அனுப்பினான்.
அதில், தான் சரணடைய விரும்புவதாகவும், அதற்கு முன்பாக காட்டுப் பகுதியில் தம்மைப் பிடிப்பதற்காகநிறுத்தப்பட்டுள்ள கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படைகளை விளக்கிக் கொள்ள வேண்டும் என்றும்வேண்டுகோள் விடுத்திருக்கிறான்.
இந்தக் கேசட் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேசட்டில்கூறப்பட்டுள்ளவற்றைக் கேட்டறிந்த முதல்வர், கேசட்டில் பேசியிருக்கும் குரல் வீரப்பனின் குரல்தானா என்றுகண்டறிய உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்தக் கேசட் சிறுமுகைக் காட்டுப்பகுதியில் இருந்துதான் வந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.இதையடுத்து, அந்தப் பகுதியில்தான் வீரப்பன் இருப்பான் என்று கருதி அதிரடிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக காந்தவயல் காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டையில்ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அந்தப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் 2 பேர் காட்டுக்குள் திரிந்தபோது, அவர்களைஅதிரடிப்படையினர் கைது செய்தனர்.
அதிரடிப்படையை வாபஸ் பெற கர்நாடகம் மறுப்பு
இதற்கிடையே வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ள கர்நாடக அதிரடிப்படையைத் திரும்ப அழைக்கமாட்டோம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று கூறினார். வீரப்பனைச்சரணடையுமாறும் நாங்கள் கேட்டுக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
"நெற்றிக்கண்" ஆசிரியர் மணிக்கு வீரப்பன் அனுப்பியுள்ள கேசட் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "முதலில்அது வீரப்பன் குரல்தானா என்பது கண்டுபிடிக்கப்படட்டும்" என்று கூறினார் கார்கே.