அதிமுகவுடன் ஆதரவுக்கு பா.ஜ.க. வரவேற்பு
சென்னை:
மத்திய அரசுக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு தர அதிமுக முன் வந்துள்ளதை பா.ஜ.க. ஆதரித்துள்ளது.
திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பா.ஜ.க.தலைவர்களை சந்திப்பதைக் கூட கருணாநிதி தவிர்த்து வருகிறார்.
இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத்தில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலமாக பா.ஜ.கவைநெருங்க முயன்று வருகிறது அதிமுக. இதன் முதல்கட்டமாக பொடோ சட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவுதெரிவித்தார். அடுத்தாக பிரச்சனைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரவும் தயார் என்றார்.
இதனால் அதிமுக-பா.ஜ.க. நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந் நிலையில் பா.ஜ.கவின் துணைத் தலைவர் ராமாராவ் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அதே நேரத்தில்பிரச்சனை அடிப்படையில் எங்களுக்கு ஆதரவு தரத் தயார் என அதிமுக கூறியுள்ளது. யார் ஆதரவு தந்தாலும் ஏற்கத்தயார். எங்களை ஆதரிக்க முன் வரும் கட்சியை நாங்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்.
பொடோ சட்டத்தை அதிமுக ஆதரிப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் பா.ஜ.கவை வளர்க்கபாடுபடுவோம் என்றார்.